அரசு பணியில் இருப்போர்களுக்கு ஒய்வூதியம் கிடைப்பது அனைவரும் அறிந்த ஒன்று, பணியில் இருக்கும்போது உயர் பதவியில் இருந்தால் மட்டுமே அதிகளவிலான ஒய்வூதியம் கிடைக்கும், காரணம் பணியில் இருக்கும்போதே அதிகமான சம்பளம் பெற்று இருப்பது தான்.
ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும், அதிகப் பென்ஷன் தொகையைப் பெற முடியும், குறிப்பாகத் தனியார் ஊழியர்களுக்கு கிடைக்கும் சராசரி ஓய்வூதிய தொகையை விடவும் 12 மடங்கு அதிக பென்ஷன் தொகையைப் பெற முடியும்.
பிரவின் கோஹ்லி
ஹரியானா மாநிலத்தின் சுற்றுலா நிறுவனத்தின் தலைவராக இருந்த பிரவின் கோஹி 37 வருடம் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இந்த ஆண்டின் நவம்பர் 1ஆம் தேதி முதல் இவருக்கான பென்ஷன் தொகை 2,372 ரூபாயில் இருந்து 30,592 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இது கிட்டத்தட்ட 1,200 சதவீதம் அதிகமாகும். எப்படி இது சாத்தியமானது.?
பென்ஷன் திட்டம்
ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு அளிக்கும் ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டத்திற்கு (EPS) எதிராக 12 பேர் தொடுத்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 2016ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பின் படி இவர்களுக்கான சலுகையை மட்டும் வழங்காமல் இந்திய நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்தப் பலனை அளிக்கும் வகையில் தற்போது விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனியார் ஊழியர்களுக்கும் இந்தப் பலனை அனுபவிக்கலாம். என்ன வழக்கு தெரியுமா..?
அளவீடு மாற்றம்
1996 மார்ச் மாதம் ஊழியர்கள் பென்ஷன் திட்டத்தின் சட்டத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதில் ஈபிஎப்ஓ உறுப்பினர்கள் அனைவரும் அடிப்படை சம்பளம் மற்றும் கிராக்கிப்படி தொகையில் 8.33 சதவீத தொகையை ஓய்வூதிய திட்டத்திற்குச் செலுத்தலாம் என அறிவித்தது. இதன் மூலம் பென்ஷன் தொகை பல மடங்கு அதிகரித்தது.
வழக்கின் தீர்ப்பு
இதற்கு நிறுவனங்களும், தனியார் பிஎப் அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, ஈபிஎப்ஓ அமைப்பிற்கு எதிராக நாட்டில் பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதில் ஒரு நீதிமன்றத்தைத் தவிர அனைத்திலும் ஊழியர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது.
ஊழியர்கள் தங்களது விருப்பத்தின் படி எவ்வளவு வேண்டுமானாலும் பென்ஷன் திட்டத்திற்கான தொகையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றமும் இறுதி தீர்ப்பை அளித்தது.
அக்டோபர் 2016 தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஈபிஎப்ஓ அமைப்பிற்கு ஒரு வருடமாகியுள்ளது சற்று வருத்தமான செய்தியாகு இருந்தாலும் 4.5 ஊதியதாரர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
கோஹ்லியின் முடிவு
இந்நிலையில் தீர்ப்பை சாதகமாக எடுத்துக்கொள்ள முடிவு செய்த பிரவின் கோஹ்லி தனது முழுச் சம்பளத்தையும் பென்ஷன் திட்டத்திற்குக் கொடுக்க முடிவு செய்தார்.
ஏற்கனவே அவர் பென்ஷன் திட்டத்திற்குக் கொடுத்த தொகைக்கும் தற்போது கொடுக்க நினைக்கத் தொகைக்குமான வித்தியாசம் 15.37 லட்சம் ரூபாய். இதனை ஈபிஎப்ஓ அமைப்பில் செலுத்திவிட்ட காரணத்தால் வெறும் 2,372 ரூபாயாக இருந்த மாத பென்ஷன் தொகை தற்போது 30,592 ரூபாயாக உயர்ந்துள்ளது.
நவம்பர் 2017
இந்நிலையில் பிரவின் கோஹ்லிக்கு நவம்பர் 2017 முன் 4 வருடத்திற்கான ஓய்வூதிய அரியர் தொகையாக 13.23 லட்சம் ரூபாய்க் கிடைத்தது. இதனை அப்படியே பென்ஷன் திட்டத்திற்குச் செலுத்த முடிவு செய்தார். எஞ்சியுள்ள 2.14 லட்சம் ரூபாயைக் கொடுத்த பின் நவம்பர் 1ஆம் தேதி முதல் இவருக்கு 12 மடங்கு அதிக ஓய்வூதிய தொகை கிடைத்துள்ளது.
மரணம்
இந்தத் தொகை பிரவின் கோஹ்லி இறக்கும் வரையில் அவருக்குக் கிடைக்கும், அவர் இறந்த பின் அவரது மனைவிக்கு இதில் 50 சதவீத தொகை கிடைக்கும்.
யாருக்கெல்லாம் இந்தச் சலுகை கிடைக்கும்..
செப்டமர் 1, 2014 முன் பணியில் சேர்ந்த அனைவருக்கும் இந்தச் சலுகை உண்டு, அதேபோல் செப்டமர் 1, 2014 பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 15,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் அனைவருக்கும் இந்தச் சலுகை பொருந்தும். 15,000 ரூபாய்க்கும் அதிகமாக இருப்போருக்கும் இந்தச் சலுகை கிடையாது.