அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது சீனா வளர்ச்சி வங்கி இன்சால்வென்சி புகாரை அறிவித்துள்ளது.
தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தனது வர்த்தகத்தையும், சேவையையும் முழுமையாக நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்துவர்கள் தொடர்ந்து நெருக்கடியை அளித்து வருகின்றனர். இதனால் தற்போது அனில் அம்பானி மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளார்.
இன்சால்வென்சி என்றால் என்ன..?
ஒரு நிறுவனத்தின் மதிப்பு வாங்கிய கடனை விடவும் அதிகமாக இருக்கும் நிலையில், கூடுதல் நிதி திரட்டும் நிலையில் இல்லாமலும், கடன் கொடுத்தவர்களுக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கும் நிலையில் கடன் கொடுத்தவர்கள் இன்சால்வென்சி புகாரை அளிப்பார்கள்.
புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில் நிறுவன சொத்துக்கள் அனைத்தும் ஏலத்திற்கு விடப்படும்.
சீன வளர்ச்சி வங்கி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குச் சீன வளர்ச்சி வங்கி சுமார் 1.78 பில்லியன் டாலர் அதாவது 11,460 கோடி ரூபாய் அளவிலான பணத்தைக் கடனாகக் கொடுத்துள்ளது.
இது ஆர்காம் நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பில் 37.11 சதவீதமாகும்.
புகார்
இந்நிலையில் சீன வளர்ச்சி வங்கி தற்போது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், ஆர்காம் நிறுவனத்திற்கு எதிராக இன்சால்வென்சி புகாரை அளித்துள்ளது.
இந்தப் புகாரில், சீன வளர்ச்சி வங்கி வழக்கு ஏதும் தொடுக்காமல் நீதிமன்றத்திற்கு வெளியில் கடனை செலுத்தினாலும் சரி என்று குறிப்பிட்டுள்ளது.
சொத்து விற்பனை
ஏற்கனவே ஆர்காம் தனது சொத்துக்களை விற்பனை செய்து கடன் தீர்க்க பல முயற்சிகள் செய்யப்பட்டு இருந்த நிலையில், அனைத்து முயற்சிக்கும் கடன் பிரச்சனை பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்நிலையில் சீன வளர்ச்சி வங்கியின் இந்தப் புகார் ஆர்காம் நிறுவனத்தில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
ஏர்செல் தோல்வி..
அனில் அம்பானி ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்ற பல முயற்சிகள் செய்தார் ஆனால் கடந்த 2 மாதமாக இதில் தொடர் பின்னடைவைச் சந்தித்த காரணத்தால்
ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றும் முடிவில் இருந்து விடுபட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் சொத்து
இந்நிலையில் ஆர்காம் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் நவி மும்பையில் இருக்கும் திருபாஸ் அம்பானி நாலேட்ஜ் சிட்டியில் உள்ளது இந்நிறுவனத்தின் பங்குகளைச் சீன வளர்ச்சி வங்கிக்கு அளிப்பது மூலம் கடன் பிரச்சனையைத் தீர்க்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.
எரிக்சன்
சீன வளர்ச்சி வங்கிக்கு முன்பு ஸ்வீடன் டெலிகாம் நிறுவனமான எரிக்சன், ஆர்காம் நிறுவனத்தின் மீது திவால் ஆகிவிட்டத்து என நீதிமன்றத்தின் புகார் கொடுத்து, தான் அளித்த 1,150 கோடி ரூபாயை கோரியது.
மனிப்பால் டெக்னாலஜிஸ்
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் வாயிலாக மனிப்பால் டெக்னாலஜிஸ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அளிக்க வேண்டிய 2.74 கோடி ரூபாய் தொகையைக் கோரி புகார் அளித்தது. ஆனால் நவ்.15ஆம் தேதி ஆர்காம் மனிப்பால் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
டெக் மஹிந்திரா
ஆர்காம் நிறுவனத்திற்கு எதிராக டெக் மஹிந்திராவும் இன்சால்வென்சி புகாரை அளித்தது, இதில் இருதரப்பும் ஒப்புக்கொண்டு 8.2 கோடி ரூபாய் தொகையைப் பெற்றுக்கொண்டு டெக் மஹிந்திரா பிரச்சனை முடித்துக்கொண்டது.
ஆகக் கடந்த சில மாதங்களில் மட்டும் ஆர்காம் மீது கிட்டத்தட்ட 4 நிறுவனங்கள் நொடித்து மற்றும் திவால் புகாரை அறிவித்துள்ளது.
45,000 கோடி ரூபாய்
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது 45,000 கோடி கடனில் மிதக்கிறது.