சென்ற ஆண்டு ஜனவரி மாதம் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைத் துவக்கி வைத்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைத் துவங்கி வைத்தார்.
துவக்க விழாவில் பேசிய பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சஹ்ர்மா இந்திய நிதி துறை மிகப் பெரிய புரட்சியைச் செய்ய இருக்கிறது. இதில் பேடிஎம் நிறுவனத்திற்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சி என்றும் இதனால் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் சேமிப்பு கணக்கு
பேடிஎம் வங்கி சேவை பயன்படுத்தும் அனைவருக்கும் ஜீரோ கட்டண பணப் பரிவர்த்தனை சேவை வழங்கப்படும் என்றும் குறைந்தபட்ச இருப்புத் தொகை ஏதும் தேவையில்லை என்றும் இலவசமாக ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வட்டி விகிதம்
அது மட்டும் இல்லாமல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 4 முதல் 7 சதவீதம் வட்டி விகிதம் லாபம் கிடைக்கும் என்றும், பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு 7% லாபம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையான பாதுகாப்பான சேவை
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை பிரிவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்கனருமான ரேனு சத்தி இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் வங்கி சேவையாகப் பேடிஎம் இருக்கும் என்று தெரிவித்தார். நாங்கள் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கி சேவையினை மக்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
கிரெடிட் சேவை
பேடிஎம் நிறுவனம் அன்மையில் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து குறைந்த கால, வட்டி இல்லா கிரெடிட் சேவையினைப் பேடிஎம் - ஐசிஐசிஐ வங்கி போஸ்ட்பெய்டு என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
500 மில்லியன் பயனர்கள்
2020-ம் ஆண்டுக்கு 500 மில்லியன் வங்கி கணக்குகளைப் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை மூலம் வழங்க இருப்பதாக விஜய் சேகர் ஷர்மா தெரிவித்தார்.