மத்திய மாநில அரசுகளின் மானியம், சேவைகள், சலுகைகள் பெற ஆதார் எண்-ஐ அனைத்து இடங்களிலும் கட்டாயமாக்கி கொண்டு இருக்கிறது. மக்களுக்கு இதனைச் சகிக்க முடியாமல் அனைத்து இடங்களிலும் இணைத்து வரும் நிலையில், தற்போது இண்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்களும் ஆதார் எண்-ஐக் கட்டாயமாக்கி வருகிறது.
அமேசான்
சமீபத்தில் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாகத் திகழும் அமேசான், தனது வாடிக்கையாளர்களிடம் தொலைந்து போன பார்சல்களை டிராக் செய்ய ஆதார் எண்-ஐக் கட்டாயம் இணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஜூம்கார்
அதேபோல் ஜூம்கார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் கார்டு இல்லையெனில் கார் புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பேடிஎம் மற்றும் வங்கி சேவைகள்
ஏற்கனவே பேடிஎம் போன்ற வங்கி மற்றும் நிதியியல் சேவை அளிக்கும் அனைத்து நிறுவனம் ஆதார் எண்-ஐப் பெற்றுள்ள நிலையில், தற்போது இண்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்களும் மக்களிடம் ஆதார் எண்-ஐப் பெற தயாராகியுள்ளது.
ஓலா மற்றும் உபர்
அமேசான் மற்றும் ஜூம்கார் நிறுவனங்களைத் தொடர்ந்து ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்-ஐ இணைக்கும் வழியைத் திட்டமிட்டு வருகிறது.
தளர்வு..
இதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளர் ஆதார் எண்-ஐக் கொடுக்க முடியவில்லை எனில், அவர்கள் கொடுக்கும் தகவல்களை வைத்து பார்சல் மற்றும் இதர பணிகள் கையாளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜூம்கார் நிறுவனம் கட்டாயம் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஆதார் எண்ஐ கொடுக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இல்லையெனில் புக்கிங் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது.
ஆதிக்கம்..
மக்கள் தற்போது அதிகளவில் ஆன்லைன் சேவை, இண்டர்நெட் நிறுவனங்களை நம்பியிருக்கும் காரணத்தால் வாடிக்கையாளர்களின் தகவல்களை முழுமையாகப் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது.