சில மாதங்களுக்கு முன்பு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் வைப்பு நிதிகள் மீதான வட்டி விகிதத்தை அதிகளவில் குறைந்து. இதனால் சாமானியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பல்க் டெப்பாசிட் மீதான வட்டி விகித்தை 1 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் மாறுபட்ட முதிர்வு காலம் கொண்ட அனைத்து பல்க் டெப்பாசிட்களுக்கும் அதாவது 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வைப்புகளுக்கும் இப்புதிய வட்டி உயர்வு பொருந்தும். ஆனால் 1 கோடி ரூபாய் வரையிலான வைப்புக்கு எவ்விதமான வட்டி மாற்றமும் அளிக்கப்படவில்லை.
இதன் மூலம் வியாழக்கிழமை முதல் எஸ்பிஐ வங்கியில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வைப்பு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5.25 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்பட உள்ளது.
இதில் மூத்த குடிமக்களுக்கான வைப்பில் 50 புள்ளிகள் கூடுதல் வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.
நவம்பர் 10ஆம் தேதியின் நிலவரப்படி இந்திய வங்கிகளில் வைப்புகளின் வளர்ச்சி அளவு 8.14 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு 15.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.