டெல்லி: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி வாசிக்க இருக்கிறார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் ஜனவரி 30-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் உறையுடன் துவங்க உள்ளது என்றும் மூத்த அரசாங்க அதிகாரி தகவல் அளித்தார்.
பொருளாதாரச் சர்வே ஜனவரி 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தக்கல் செய்யப்பட இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெட்டினை 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்து வருகின்றனர்.
பட்ஜெட் தாக்கல் 1 மாதம் முன்பே செய்யப்படுவதால் நிதி ஆண்டுத் துவக்கமான ஏப்ரல் 1 முதல் நலத்திட்ட நிதிகள் கிடைக்கும் என்றும் இதனால் அனைத்து திட்டப்பனிகளும் வேகமாகவும், குறித்த நேரத்திலும் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதே போன்று சென்ற ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டும் நீக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக வாசிக்கப்பட்டு வருகிறது.
குளிர்காலக் கூட்டம் முடிவடைந்த 1 மாதத்திற்குப் பிறகே எப்போதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாலும், அருண் ஜேட்லி வாசிக்க இருக்கும் 5வது பட்ஜெட் என்பதும் சிறப்பம்சமாக உள்ளது.