இந்தியாவின் மிகமுக்கிய உள்கட்டமைப்புத் திட்டமாகக் கருதப்பட்ட ஹைதராபாத் மெட்ரோ பிரதமர் மோடி மற்றும் தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரால் வெற்றிகரமாகத் துவங்கி வைக்கப்பட்டு மியாபூர் முதல் குட்கப்பள்ளி வரையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையில் பயணித்தனர்.
சென்னையிலும் மெட்ரோ சேவை துவங்கும்போது இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் தற்போது ஹைதராபாத்தும் இதே பெருமையும் அடைந்துள்ளது.
ஹைதராபாத் மெட்ரோ சேவையின் மூலம் இந்நகரத்தின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பெரிய அளவில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் மெட்ரோ குறித்துச் சில முக்கியமான விஷயங்கள் உங்களுக்காக.
30 கிலோமீட்டர்
மியாபூர் முதல் நாகோல் வரையிலான சுமார் 30கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில் திட்டம் பாதையில் சுமார் 24 நிறுத்தங்கள் அதாவது ஸ்டேஸ்ஷன் உள்ளது.
முதற்கட்டமாக மெட்ரோ ரயில் காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரையில் இயக்கப்பட உள்ளது. சில மாதங்களுக்குப் பின் இது காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணிவரை நீட்டிக்கப்பட உள்ளது.
கட்டணம்
ஹைதராபாத் மெட்ரோ ரயில் பயணத்திற்குக் குறைந்தபட்சமாக 10 ரூபாயும், 26 கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவிற்கு 60 ரூபாய் வரையிலும் கட்டணத்தை வசூலிக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோவிலும் இதே கட்டணம் தான்.
மக்கள் சேவைக்கு...
நவம்பர் 28ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தச் சேவை எவ்விதமான காலதாமதமும் இன்றி நவம்பர் 29ஆம் தேதியே மக்களின் சேவைக்கு வந்தது.
முக்கியமான இடங்கள்
ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் ராஜீவ் காந்தி இண்டர்நேஷ்னல் கிரிகெட் ஸ்டேடியம், ஒஸ்மானியா பல்கலைக்கழகம், ரயில் நிலையம், பெகும்பெட் மற்றும் அமீர்பெட் பகுதியில் இருக்கும் முக்கியமான வர்த்தக மையங்கள் என இந்நகரத்தின் முக்கியமான வர்த்தகம் மற்றும் மக்கள் அதிகம் இருக்கும் இடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
சைக்கிள்
பொதுவாக அனைத்து மெட்ரோ நிலையங்களை இணைக்கு மின்பஸ், ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி ஆகியவை இருக்கும் நிலையில் ஹைதராபாத் மெட்ரோ நிலையங்களில் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை மேலும் சிறப்பானதாக்க சைக்கிள்களும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலையில் டிராப்பிக் பிரச்சனையும் குறையும்.
மாசுபாடு
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் டெக்னாலஜி ஹப் ஆக விளங்கும் ஹைதராபாத் நகரின் போக்குவரத்து வேகமடையும், இதனால் தனியார் வாகன பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து சாலை நெரிசல் மற்றும் போக்குவரத்தால் காற்று மாசுபாட்டையும் குறைக்க வழி செய்துள்ளது தெலுங்கான அரசு.
இத்திட்டத்தின் பலனாக இந்நகரின் மக்கள் தொகை வருகிற 2021ஆம் ஆண்டுக்குள் 1.36 கோடியாக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
73 கிலோமீட்டர் திட்டம்..
ஹைதராபாத் மெட்ரோவின் தற்போதைய 30 கிலோமீட்டர் பயணத்தை 73 கிலோமீட்டர் வரையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மியாபூர் மற்றும் எல்பி நகர் மத்தியில் 24 ஸ்டேஷன்கள், ஜேபிஎஸ் முதல் பல்கநுமா வரையில் 16 ஸ்டேஷன்கள், நாகோல் முதல் ஷிபாரமம் வரையில் 23 ஸ்டேஷன்கள் எனத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
2018இல் துவக்கம்
தற்போது மியாப்பூர் முதல் நாகோல் வரையில் மட்டுமே ஹைதராபாத் மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் 2018 டிசம்பர் மாதத்தில் மீதமுள்ள இரண்டு வழித்தடத்திலும் இச்சேவை இயக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
15,000 கோடி ரூபாய்
இத்திட்டத்திற்குப் பொது மற்றும் தனியார் கூட்டணியில் அமைக்கப்பட்ட ஹைதராபாத் மெட்ரோ ரயில் லிமிடெட் அமைப்பு திட்டமிட்டு வடிவமைத்து வரும் இத்திட்டம் 15,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் நடைமுறைப்படுத்த வருகிறது.
20,000 கோடி ரூபாய்
சென்னை மெட்ரோவின் முதல்கட்ட திட்டத்தின் மொத்த செலவு 14,600 கோடி ரூபாய் என 2007ஆம் ஆண்டுக் கணிக்கப்பட்ட நிலையில், 2014ஆம் ஆண்டு இத்திட்டம் முடிவடைந்த போது இதன் மொத்த மதிப்பு 20,000 கோடி ரூபாயாக உயர்ந்தது.
2வது கட்ட திட்டத்தின் மதிப்பு 44,000 கோடி ரூபாய் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வேகம்
இந்த மெட்ரோ ரயில் மணிக்கு 80 முதல் 34 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் பயணிக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 15கிலோமீட்டர் தொலைவை வெறும் 22 நிமிடத்தில் சென்றடைய முடியும், பஸ்ஸில் பயணித்தால் இது 1மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் தேவைப்படும்.
3 நிமிடத்திற்கு
பீக் நேரத்தில் மெட்ரோ ரயில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடைவேளி காலம் 5 நிமிடம் வரையில் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை
தற்போதைய கணக்கீட்டில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு நாளுக்கு 17 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்றும், 2024ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 24 லட்சம் வரையில் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
முக்கியச் சேவைகள்
மெட்ரோ ரயில் நிலையம் முழுவதும் ஏசிகள் அமைக்கப்பட்டுள்ளது, நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கும் வகையில் மினிபஸ் சேவை உள்ளது. இதன் மூலம் அருகில் இருக்கும் இடத்திற்கு வரைவாகச் சென்றடைய முடியும்.
சிறந்த திட்டம்..
பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து அதாவது PPP முறையில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டத்தில் இதுவரை பாங்காங் மெட்ரோ திட்டமே முதல் இடத்தில் இருந்தது. இதுவெறும் 32 கிலோமீட்டர் மட்டுமே என்பதால் தற்போது ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட திட்டம் 73 கிலோமீட்டர் தொலைவு கொண்டதால் இப்பட்டியலில் ஹைதராபாத் மெட்ரோ முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
ஸ்மார்ட்கார்ட் பயன்பாடு
மெட்ரோ ரயில் சேவையைத் தினமும் பயன்படுத்துவோருக்காக மக்களுக்கு மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக நாகோல், தார்நகா, பிரகாஷ்நகர் மற்றும் எஸ்ஆர் நகர் ஆகிய பகுதிகளில் இருக்கும் மெட்ரோ நிலையங்களில் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாக அறிக்கப்பபட்டுள்ளது.
சென்னை மெட்ரோ
இப்போ சொல்லுங்கள் சென்னை மெட்ரோ சூப்பரா, ஹைதராபாத் மெட்ரோ சூப்பரா..?
சென்னை மெட்ரோ திட்டத்தை மேலும் சிறப்பான சேவையாக மாற்றத் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும். உங்கள் கருத்து அல்லது ஐடியா என ஏதுவாக இருந்தாலும் கருத்து பதிவிடும் தளத்தில் பதிவு செய்யுங்கள்.
பெங்களூரு மெட்ரோ..
சென்னை மற்றும் ஹைதராபாத் தொடர்ந்து பெங்களூரில் 2வது கட்ட திட்டமாகப் புதிய வழிப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் சில்க்போர்டு- கேஆர் புரம், ஆர்வி ரோடு - பொம்பச் சந்திரா, கோட்டிகிரி-நாக்வாரா-பெங்களூரு ஏர்போர்ட் ஆகிய 3 வழித்தடத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வருகிற 2023க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.