மத்திய அரசு ஆதாரை மற்றும் பான் எண் உடன் இணைக்க வருகிற டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி என அறிவித்திருந்த நிலையில், தற்போது 3வது முறையாக மீண்டும் கால நீட்டிப்பு செய்துள்ளது.
மார்ச் 31 வரை
அரசின் அறிவிப்பு படி ஆதார் மற்றும் பான் எண் இணைக்க வருகிற மார்ச் 31,2018 வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர் பலர் இன்னமும் ஆதார் இணைக்கப்படாமல் இருக்கும் நிலையில், இக்கால நீட்டிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இணைப்பு
கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுக்க மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து வங்கி கணக்குகளுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் ஆதார் எண் உடன் பான் எண்ணையும் இணைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் இந்த வருடத்திற்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யமுடியாது என்றும் தெரிவித்தது. இதனால் பெரும்பாலான வரி செலுத்துவோர் இணைத்தனர்.
கால நீட்டிப்பு
நிதியமைச்சகத்தின் ஆய்வின் படி இன்னமும் வருமான வரி செலுத்தும் பலர் இணைக்கப்படாத காரணத்தால் இணைப்பிற்கான காலத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெறும் 13.28 கோடி பான் எண்கள்
இந்தியாவில் சுமார் 33 கோடி பான் எண்கள் இருக்கும் நிலையில் வெறும் 13.28 கோடி பான் எண்கள் மட்டுமே ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல்..
ஆதார் மற்றும் பான் எண் இணைக்க ஜூலை 1, 2017 முதல் வலியுறுத்தி வந்த மத்திய அரசு ஜூலை 31 கடைசியாக அறிவித்தது. அதன் பின் ஆகஸ்ட் மாதம் இதற்கான காலத்தை அவகாசத்தை டிசம்பர் 31 வரையில் நீட்டித்தது. தற்போது மார்ச் 31 வரையில் 3வது முறையாக நீட்டித்துள்ளது.