இப்போது குஜராத் தேர்தல் முடிவுகள் பிஜேபி கட்சியை விட இந்திய பொருளாதாரத்திற்கும், பங்குச்சந்தைக்கும் மிக முக்கியமாக உள்ளது.
பிரதமராக இருக்கும் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குபதிப்பு முடிந்து 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை துவங்க உள்ளது.
இந்நிலையில் குஜராத் தேர்தல் குறித்து வெளிவரும் ஒவ்வொரு முக்கியமான செய்திகளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். உதாரணமாகத் தேர்தல் முந்தைய கணிப்புகளில் பிஜேபி கட்சிக்கு சாதகமான இருந்த நிலையில், மும்பை பங்குச்சந்தை பெரிய அளவில் உயர்வைக் கண்டது மறந்திருக்க முடியாது.
2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல்
குஜராத் மாநில தேர்தல் வெற்றிதான் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சிக்கான வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். இதேபோல் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் தான் அடுத்த 5 வருட இந்திய பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.
கணிப்புகள்
மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் தேர்தல் துவங்கிய பின்பு மக்கள் மத்தியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிஜேபி கட்சியின் வெற்றி சந்தேகமான அளவிலேயே உள்ளது எனச் சமுக வலைத்தளத்தில் செய்திகள் வந்த நிலையில், கடந்த சில நாட்களில் மந்த வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
பிஜேபியின் தோல்வி..
ஆளும் கட்சியான பாரத ஜனதா கட்சியின் தோல்வி இந்திய பொருளாதாரத்தை எப்படி எல்லாம் பாதிக்கும் என்ற விவாதம் தற்போது பெரியதாக வெடித்துள்ளது.
தோல்விக்குப் பின் இந்திய சந்தையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கான கணிப்புகளையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
முதலீடு சந்தை
குஜராத் தேர்தலில் பிஜேபி தோல்வியைச் சந்தித்தால், முதலீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை அதிகளவில் குறைத்துக்கொள்வார்கள். இதனால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சில வாரங்களிலேயே 10-15 சதவீதம் வரையிலான சரிவை சந்திக்கும்.
பட்ஜெட் அறிக்கை
2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சந்தை கணிப்புகளை விடவும் குறைவான நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) இலக்கை அறிவித்து, செலவிடும் அளவை அதிகளவில் குறைக்கும். இதன் மூலம் இந்திய பொருளாதாரச் சந்தையில் மறுசீரமைப்பு செய்யும் ஒரு வாய்ப்பு உருவாகும்.
இந்த முயற்சியின் மூலம் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டு எடுக்க முடியும்.
நம்பிக்கை
குறைவான நிதி பற்றாக்குறை இலக்கை அறிவிக்கும் பட்சத்தில், முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஈர்க்க வாய்ப்பு உருவாகும், இதனால் புதிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்துச் சரிவில் இருந்து மீளும் பாதையில் இந்திய பொருளாதாரப் பயணிக்கும்.
குறிப்பாக ஆதார் அட்ராசிட்டி குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி..
இதுவரை நாம் பார்த்தது பிஜேபி தோல்வி மற்றும் அதன் எதிரொலிகளை மட்டுமே, இப்போது வெற்றி அடைந்தால் என்னவாகும் என்பதைப் பார்ப்போம்.
உடனடி உயர்வு
குஜராத் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளைப் போலவே பிஜேபி வெற்றி அடைந்தால், பங்குச்சந்தை உடனடியாக உயர்வைச் சந்திக்கும். அடுத்ததாகப் புதிய முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், ஜிஎஸ்டி பாதிப்புகளைக் களையும் வண்ணமாகப் பட்ஜெட் அறிக்கை தயாரிப்பில் முழுவீச்சில் இருக்கும் மோடி அரசு.
நீண்ட கால நோக்கம்..
பட்ஜெட் அறிக்கையின் மூலம் கிடைக்கும் பயன் பொதுவாக நீண்ட கால அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் இது குறித்து உறுதியான கணிக்க முடியாது. இத்தகை சூழ்நிலை குறுகிய கால அடிப்படையிலான முதலீட்டாளர்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமையும்
இதனால் குறுகிய கால முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை ஈர்ப்பது எளிதாகி, பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவை பிரிவுகள் வளர்ச்சி அடையும்.
சுருக்கம்..
பிஜேபி தோல்வியில் குறுகிய காலத்தில் தொய்வும், நீண்ட காலத்தில் வளர்ச்சியும் சந்திக்கும். வெற்றியில் குறுகிய காலத்தில் வளர்ச்சி, நீண்ட காலத்தில் தொய்வு ஏற்படலாம் எனத் தெரிகிறது.
டிசம்பர் 18ஆம் தேதி வரை காத்திருப்போம்.