மத்திய அரசு வியாழக்கிழமை ஆதார் - மொபைல் எண் இணைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையினை ஏற்றுப் பிப்ரவரி 6 ஆக இருந்த காலக்கெடுவினை 2018 மார்ச் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
எனவே தற்போது மத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்கக் காலக்கெடுவை 2018 மார்ச் 31 வரை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதார் - பான் இணைப்பு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை சென்ற வாரம் தான் மத்திய அரசு டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து நீட்டித்து 2018 மார்ச் 31-க்குள் இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆதார் - பான் இணைப்பைச் செய்தால் தான் வருமான வரி தாக்கல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் - வங்கி கணக்கு
இரண்டு நாட்களுக்கு முன்னர்ப் புதன்கிழமை தான் மத்திய அரசு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதியை டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து நீட்டித்து 2018 மார்ச் 31-க்குள் இணைக்க வேண்டும் என்று அறிவித்தது.
ஆதார் - மொபைல் எண்
மேலும் தற்போது மத்திய அரசு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையினை ஏற்றுப் பிப்ரவரி 6 ஆக இருந்த மொபைல் எண் - ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடுவினை 2018 மார்ச் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
அரசு நலத் திட்டங்கள்
அரசு பொது நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி இன்னும் 2017 டிசம்பர் 31 ஆகவே உள்ளது. இதனை மத்திய அரசு நீட்டித்து அறிவிக்குமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்டு
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கக் காலக்கெடு 2018 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மியூச்சுவல் ஃபண்டு, பங்குச் சந்தை கணக்குகளுக்குக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.