இந்திய ஐடித்துறையில் மிகப்பெரிய நிறுவனமாகவும், டாடா குழுமத்தின் வற்றாத காவிரியாகவும் விளங்கும் மென்பொருள் வர்த்தகப் பிரிவான டாடா கன்சலன்டன்சி சர்வீசஸ், இந்தியாவில் இதுவரை யாரும் பெற்றிடாத அளவிற்கு அதிக மதிப்புடைய திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இதனால் டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ், எச்சிஎல், டெக் மஹிந்திரா, சிடிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் வாய் அடைத்து போயுள்ளது
அப்படி என்ன மதிப்பு..?
பிரிட்டன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நீல்சென் என்னும் தொலைக்காட்சி மதிப்பு மேலாண்மை நிறுவனத்திடம் இருந்து 2.25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை அளிக்கும் திட்டத்தை டிசிஎஸ் கைப்பற்றியுள்ளது,
அதிக மதிப்புடையது..
இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் இதுவரை பெற்ற அதிகப்படியான மதிப்பு உடையத் திட்டம் என்றால் இதுதான்.
டிசிஎஸ் நிறுவனம் 2.25 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்திய ஐடி துறையில் தற்போது திட்ட மதிப்புகளின் மென்ச்மார்க் அளவுகள் அதிகரித்துள்ளது.
320 மில்லியன் டாலர்
இத்திட்டத்தின் மூலம் டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சராசரியாக 320 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை 2017-2020 வரையிலான காலத்திற்குப் பெறும். 2021-2024 வரையிலான காலத்தில் இதன் அளவு 186 மில்லியன் டாலராகவும், 2025ஆம் ஆண்டில் இதன் அளவு 139.5 மில்லியன் டாலராகவும் இருக்கும் என டிசிஎஸ் விளக்கம் அளித்துள்ளது.
முதல் மைல்கல்
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து சந்திரசேகரன் வெளியேறிய பின்பு ராஜேஷ் கோபிநாத் இப்பதவியில் நியமிக்கப்பட்டார். இதன் பின் டிசிஎஸ் சந்தித்த மிகப்பெரிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் ராஜேஷ் கோபிநாத்-இன் முதல் பெரிய வெற்றியாகவும் இது உள்ளது.
ரிலையன்ஸ் உடன் போட்டி
2017ஆம் ஆண்டில் அதிக வருவாய் மற்றும் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் நிறுவனங்கள் பட்டியலில் முகேஷ் ஆம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், டிசிஎஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2007 திட்டம்..
நீல்சென் நிறுவனம் 2007ஆம் ஆண்டு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான 10 ஆண்டுத் திட்டத்தை டிசிஎஸ் நிறுவனத்திற்குக் கொடுத்தது. 6 வருடத்திற்குப் பின் இத்திட்டத்தை 2.5 பில்லியன் டாலராகவும் கூடுதலாக 3 வருடங்களுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யப்பட்டது.