டெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4 காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்கள் மிதான வட்டி விகிதத்தினை 0.2 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதனால் தேசிய சேமிப்புப் பத்திரம், பிபிஎ போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு லாபம் குறையும்.
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தேசிய சேமிப்புப் பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா, பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிஎப் மற்றும் என்எஸ்சி
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் ஆகிய திட்டங்களில் 7.8 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 2018 ஜனவரி முதல் 2018 மார்ச் வரை 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திரா
கிசான் விகாஸ் பத்திரா திட்டம் கீழ் முதலீடு செய்தவர்களுக்கு இருந்து வந்த 7.5 சதவீத வட்டி விகிதம் 7.3 சதவீதமாக வரும் காலாண்டில் குறைக்கப்பட்டுள்ளது.
செல்வ மகள் திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதம் 8.3 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டெர்ம் டெபாசிட்ஸ்
1 வருடம் முதல் 5 வருடம் வரையிலான டெர்ம் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 6.6 சதவீதம் முதல் 7.4 சதவீதம் லாபம் மட்டுமே கிடைக்கும். 5 வருட ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு 6.9 சதவீதம் லாபம் கிடைக்கும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் மூத்த குடிமக்களுக்கு 8.3 சதவீத வட்டி விகிதம் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு
தபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதமும் 4 சதவீதமாகத் தொடருகிறது.
வட்டி விகிதம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. அரசு பத்திரங்கள் கீழ் கிடைக்கும் லாபத்தினை வைத்துச் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.