டெல்லி: நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதாவானது விரைவில் அமலுக்கு வர வாய்ப்புள்ளதால் தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ள பணம் எல்லாம் என்ன ஆகும் என்று கவலையாக உள்ள நிலையில் தற்போது புதிய குண்டு ஒன்றை தூக்கிப்போட்டுள்ளனர்.
வங்கி டெபாசிட் திட்டங்கள் மீது தற்போது கடன் உத்தரவாதக் கூட்டுஸ்தாபன சட்டம், 1961-ன் கீழ் 1 லட்சம் ரூபாய் வரையில் உள்ள பணத்திற்குக் காப்பீடு அளிக்கப்படுகிறது. இதுவே 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வைத்து இருந்தாலும் வங்கி திவாலானால் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
எப்ஆர்டிஐ மசோதா
ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய எப்ஆர்டிஐ மசோதாவால் இதற்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறி வந்த நிலையில் காப்பீடு பணத்தினை உயர்த்தித் தருவதாகவும் இது 25 வருடத்திற்குப் பிறகு செய்யப்போகும் மிகப் பெரிய மாற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.
காப்பீட்டுத் தொகை உயர்வு
தற்போது மத்திய அரசு இந்தக் காப்பீட்டுத் தொகையினை 12 மடங்கு உயர்த்தி அளிக்கப்போவதாகவும் இதனால் 90 சதவீதம் வரையிலான வங்கி டெபாசிட் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
டெபாசிட் அளவு
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 97 சதவீத வரை வங்கி டெபாசிடகளில் உள்ள தொகையானது 15 லட்சம் அல்லது அதற்குக் குறைவான தொகையினை வைத்துள்ளவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
நன்மையா? தீமையா?
காப்பீடு தொகை உயர்த்தப்படுவது நமக்கு நல்லது தானே, இதனால் என்ன பாதிப்பு என்று தலைப்பை பார்த்து நீங்கள் கேட்கும் கேள்வி எனக்குத் தெரிகிறது. வாங்க அதைப்பற்றியும் விளக்கமாகப் பார்க்கலாம்.
நாம் தற்போது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் போது ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 பைசா காப்பீடு என வங்கிகள் செலவு செய்கின்றன. இதுவே மத்திய அரசு 1 லட்சம் ரூபாயாக உள்ள காப்பீடு தொகையினை 15 லட்சமாக உயர்த்தினால் வங்கிகளுக்குப் பிரீமியம் தொகையில் கூடுதல் செலவுகள் ஆகும்.
கூடுதல் செலவுக்கு யார் பொறுப்பு?
வங்கிகள் கூடுதல் ப்ரீமியம் தொகையினைச் செலுத்துமா? இது சந்தேகமே? அப்போது வங்கிகள் இந்தக் கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது தள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே குறைந்த அளவில் மட்டுமே லாபம் அளித்து வரும் வங்கி டெபாசிட் திட்டங்கள் கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து காப்பீடு ப்ரீமியம் தொகையினைப் பெற்றால் தற்போது பெற்று வருவதை விட மேலும் லாபம் குறையும்.