சென்னை: இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி 2015-ம் ஆண்டு 5.8 கோடி மக்களிடம் 49,000 கோடி ரூபாய் ஏமாற்றியதாகப் பிஏசிஎல் நிறுவனத்தின் மீது தடைவிதித்து இருந்தது. தற்போது அந்த நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட அளவிலான தொகையினைப் பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று முதல் தவணையாக அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதியான ஆர் எம் லோதா தலைமையில் குழு சென்ற வாரம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் பிஏசிஎல் நிறுவனத்தின் சில சொத்துக்களை விற்றுப் பணத்தினைத் திருப்பி அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு பணம் திருப்பி அளிக்கப்படுகிறது என்று செபி தெரிவிக்கவில்லை.
நிலுவை தொகை
பிஏசிஎல் நிறுவனத்திடம் இருந்து முதலீட்டாளர்களுக்கு 2,500 ரூபாய் வரை திரும்ப அளிக்க வேண்டிய நிலுவை தொகையினை மட்டும் முதற்கட்டமாக ஓய்வுபெற்ற நீதிபதியான ஆர் எம் லோதா தலைமையிலான குழு அளிக்க உள்ளது என்று செபி தமிழ் குடிரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்ததுள்ளது.
அனைவரும் விண்ணப்பிக்கலாம்
முதலீட்டாளர்கள் 2,500 ரூபாய் வரை பெற வேண்டும் என்றால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தத் தொகையினைத் திரும்பப் பெறுவதற்காக எவ்வளவு நபர்கள் விண்ணப்பிக்கிறார்கள் மற்றும் பணம் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட்டு பிரோ ரேட்டா அடிப்படையில் பணத்தினைத் திருப்பி அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பிஏசிஎல் நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்த பணத்தினைத் திரும்பப் பெற செபி அறிவித்துள்ள 562632 என்ற எண்ணிற்கு உங்களது முதலீட்டு விவரங்களை எஸ்எம்எஸ் மூலமாக அனுப்ப வேண்டும். இல்லை என்றால் இணையதளச் சேவையும் உள்ளது. அவற்றைப் பற்றிய விவரங்களுக்கு மற்றும் எப்படிச் செய்வது போன்ற வீடியோவை கான மேலும் தொடர்ந்து கட்டுரையைப் படிக்கவும்.
கடைசித் தேதி
பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பணத்தினைத் திரும்பப் பெறுவதற்கு 2018 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான விவரங்கள்
பிஏசிஎல்-ல் உள்ள பணத்தினைத் திரும்பப்பெறுவதற்கான விண்ணப்ப எண், திரும்பப் பெற வேண்டிய தொகை போன்ற விவரங்கள் உங்கள் பிஏசிஎல் பத்திரத்துடன் சரியாக ஒத்துப்போக வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாகப் பணத்தினைத் திரும்பப் பெறுவது எப்படி?
முதலில் பிஏசில் பத்திரத்தில் உள்ளபடி பெயர், பதிவு செய்த எண் மற்றும் எவ்வளவு தொகை திரும்பப் பெற வேண்டும் பொன்ற விவரங்களை டைப் செய்து 562632 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
உதாரணம்: Rajesh, U116407744, 1500
பின்னர் உங்களுக்கு ஒரு இணைப்பு அளிக்கப்படும். அந்த இணைப்பினை கிளிக் செய்து உங்கள் ஆதார் / பான் எண் மற்றும் பிஏசிஎல் பத்திரம் போன்றவற்றை ஸ்கான் செய்து பதிவேற்ற வேண்டும்.
இவற்றைச் செய்த பிறகு உங்கள் வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீடு மற்றும் வங்கி ஸ்டேட்மெண்ட், வங்கி கணக்கு வைத்துள்ளவரின் பெயர், போன்றவற்றை அளிக்க வேண்டும். பின்னர் உங்களுக்குப் பணத்தினைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை வெற்றிகரமான பெறப்பட்டதற்கு எஸ்எம்எஸ் உங்களுக்குக் கிடைக்கும்.
இணையதளச் சேவை
எஸ்எம்எஸ் சேவை மட்டும் இல்லாமல் http://sebicommitteepaclrefund.com என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது முதலீட்டு விவரங்களை மேலே கூறியது போன்று அளிக்க முடியும். அதற்கு இந்த வீடியோவை காணுங்கள்.
விண்ணப்ப நிலையினைக் கண்டறிவது எப்படி?
விண்ணப்பித்த பிறகு 044-395-771985 என்ற எண் மற்றும் உங்கள் மொபைல் எண்ணை # உடன் டைப் செய்து டையல் செய்வதன் மூலை விண்ணப்பத்தின் நிலையினைக் கண்டறிய முடியும். மேலும் உங்கள் பணம் திரும்ப அளிக்கப்படுமா என்ற அல்லது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதா, எதனால் நிராகரிக்கப்பட்டது போன்ற விவரங்களும் எஸ்எம்எஸ் வழியாக முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.