சத்யம் ஐடி நிறுவன வழக்கில் தொடர்புடைய பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் மீது செபி நேற்று இரண்டு வருடங்களுக்குத் தடை விதித்துள்ளதால் தங்களது வாடிக்கையாளர்களின் நிறுவனங்களிலும் ஆடிட் சேவையினை அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
செபியின் இந்தத் தடையினால் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 3000 ஊழியர்களின் நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை.
வாடிக்கையாளர்கள்
பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் கோல்கேட் - பால்மோலைவ், டாடா குளோபல் பீவரேஜஸ், ரிலையன்ஸ் பவர் மற்றும் யுனைட்டட் ப்ரீவரிஸ் போன்று 75 முக்கிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் சேவை அளித்துக் கணக்குத் தனிக்கை சேவையினை வழங்கி வருகிறது.
மேல் முறையீடு
எனினும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் இந்த வழக்கு குறித்து மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் அதில் ஊழியர்களின் நிலை குறித்து முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பிரைஸ் வாட்டஸ்ஹவுஸ்
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்கில் மோசடிகளைச் செய்து வரி ஏய்ப்புச் செய்ய உதவி செய்து இருப்பது தெரிய வந்துள்ளதால் செபி தடை விதித்துள்ளது.
தடையுடன் அபராதம்
தடை மட்டும் இல்லாமல் சத்யம் கம்ப்யூட்டஸ் நிறுவனத்திற்கு ஆடிட்டிங் உதவி செய்து 13.09 கோடி ரூபாய்க் கட்டணமாகப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளதால் 2009 ஜனவரி 7 முதல் ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி விகிதத்துடன் செபியிடம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏமாற்றம்
பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் செபியின் இந்த உத்தரவு எங்களுக்கு ஏமாற்றத்தினை அளிக்கிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுக்குத் தற்போது இப்படி எப்படித் தடை விதிக்க முடியும் என்று கூறியுள்ளது.
மோசடிகள்
அதுமட்டும் இல்லாமல் 2009-ம் ஆண்டுக்கு பிறகு தங்களது ஆடிட்டிங்கில் எந்த மோசடிகளும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. எனவே இந்தத் தடையின் மீது வழக்குத் தொடர்வோம் என்று கூறியுள்ளனர்.
நோக்கியா
ஆனால் நோக்கியா வரி ஏய்ப்பு வழக்கிலும் இந்த நிறுவனத்தின் பெயர் அடிப்பட்டது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடிக்குப் பிறகு கடந்த 9 வருடத்தில் இந்த நிறுவனம் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டு மிகத் தரமான ஆடிட் சேவையினை வழங்கி வருவதாகக் கூறுகின்றனர்.