ஜிஎஸ்டி அமைப்பின் 25வது கூட்டம் இன்று டெல்லியில் முடிந்தது, இக்கூட்டத்தில் E-Way பில், காம்போசிட் திட்டம் மற்றும் 3B ரிட்டன் ஆகியவை இன்னும் சில காலத்திற்குத் தொடரும் என்று ஜிஎஸ்டி அமைப்பின் தலைவர் மற்றும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரி மாற்றங்கள் ஜனவரி 25ஆம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்புகள்
1. E-Way பில் குறித்த சோதனை ஜனவரி 25ஆம் தேதி வரையில் நீடிக்கும் என்றும், அதில் பதிவேற்றம் நடவடிக்கைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிகிறது.
2. 3பி ரிட்டன் தாக்கல் தொடரும், இதனால் விநியோகிஸ்தர்கள் பில்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. இன்டரா ஸ்டேட் E-Way பில்களுக்கு 15 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.
4. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்த முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. ரியல் எஸ்டேட் துறை குறித்து எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை, இதனால் இத்துறை குறித்த முடிவுகள் அடுத்தக் கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்படும்.
6. 29 கைவினை பொருட்கள் மீதான வரி 0 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
7. சில விவசாயப் பொருட்கள் மீதான வரியும் 25வது கூட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.
8. அதேபோல் எப்படி விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் பொருட்களை வாங்கியதற்கான பில்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் முக்கியமான ஆலோசனை செய்யப்பட்டது.
9. காம்போசிட் திட்டத்தின் கீழ் 307 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.
10. மேலும் 40 கைவினை பொருட்கள் மீதான வரியை பிட்மென்ட் கமிட்டி முடிவு செய்யும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் கூறியுள்ளது.
11. இணைக்கப்பட்ட ஜிஎஸ்டி (IGST) கீழ் வசூல் செய்யப்பட்ட 35,000 கோடி ரூபாய் அளவிலான வரியை மத்திய மற்றும் மாநில அரசுகள் மத்தியில் பங்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
12. இன்றைய கூட்டத்தில் 29 சரக்கு மற்றும் 53 சேவைகளுக்கு வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.