முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டெலிகாம சேவையினை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலவசமாக அளித்து வந்தது. பின்னர் ஏப்ரல் மாதம் முதல் தான் கட்டண சேவை அளிக்கத் துவங்கியது.
எனவே செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு வரை லாபம் பெறாத ஜியோ முதன் முறையாக மூன்றாம் காலாண்டில் லாபம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டு
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 504 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் 271 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்தது.
ஏர்டெல்
அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் வியாழக்கிழமை வெளியிட்ட மூன்றாம் காலாண்டு முடிவுகளில் லாபம் சரிந்துள்ளதாக அறிவித்து இருந்தது.
ஏர்டெல் மூன்றாம் காலாண்டு அறிக்கை
சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் மூன்றாம் காலாண்டு முடிவில் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 306 கோடி ரூபாய் என நிகர லாபமானது 39 சதவீதம் வரை சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் வருவாய்ச் சரிந்திருந்தாலும் ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்ரிக்கா வருவாய் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
வருவாய்
இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோவின் வருவாய் 12 சதவீதம் உயர்ந்து 6,879 கோடி ரூபாய் பெற்றுள்ளது. சரியாக ஒவ்வொரு பயனர்களிடம் இருந்து 154 ரூபாய் மாத வருவாய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ
ஜியோ சேவை வந்த பிறகு இந்தியாவின் தரவு பயன்பாடு என்பது உலகின் அதிகளவில் உயர்ந்து அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டி போட்டு வருகிறது.