ஒவ்வொரு ஆண்டை போலவும் இந்த ஆண்டும் மத்திய அரசு 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இந்திய பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தானும் உள்ளது.
இன்றைய சூழ்நிலையில் இந்தியாவிற்குப் பாகிஸ்தான், சீனா, சீனாவின் உதவி பெறும் இலங்கை என மும்முனையிலும் ஆபத்து நிலவுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய இக்கட்டான நிலையில் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி செய்யும் நிதி ஒதுக்கீடு மிக முக்கியமான அமைந்துள்ளது.
பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்
உலகளவில் பாதுகாப்பு துறைக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ள நிலையில் இந்தியா நிதி ஒதுக்கீடு அளவில் 4வது இடத்தில் உள்ளது.
திட்டங்கள்
மோடி அரசு பாதுகாப்புத் திட்டங்களை வடிவமைப்பதிலும், முடிவுகளையும் மிகவும் ஆக்ரோஷமான முறையில் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டு இருந்தாலும், பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை வைத்துள்ளது.
12.22 சதவீதம்
கடந்த நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பு துறைக்கு, மொத்த பட்ஜெட் அறிக்கையில் வெறும் 12.22 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது. இது கடந்த 20 வருடத்தில் மிகவும் குறைவான ஒரு அளவீடு.
ஜிடிபி
1998ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஜிடிபியில் 3.18 சதவீதம் வரையில் பாதுகாப்பு துறைக்காகச் செலவிடப்பட்ட இந்தியா தற்போது வெறும் 1.6 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது.
சராசரி அளவு
இது சர்வதேச நாடுகளின் சராசரி அளவுகளான 2-2.5 சதவீதத்தை விடவும் அதிகளவில் குறைவாகும்.
சீனா தனது நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் 2.2 சதவீதமும், பாகிஸ்தான் 2.36 சதவீதம் பாதுகாப்பு துறைக்காக நிதி ஒதுக்கீடு செய்கிறது.
ஆயுத கொள்முதல்
மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியில் வெறும் 0.9 சதவீதம் மட்டுமே ஆயுதங்களைக் கொள்முதல் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவின் முப்படையிலும் ஆயுத தேவைகள் அதிகமாக உள்ளது.
குறிப்பாகப் போர் விமானம், அதிநவீன துப்பாக்கி, புல்லட் ப்ரூப் ஜாக்கெட், ஏவுகணை, ஹெலிக்காப்டர், போர்க் கப்பல் என அடிப்படை தேவைகளே எக்கச்சக்கமாக உள்ளது.
15 லட்ச ராணுவ வீரர்கள்
இந்திய ராணுவம் உலகின் 3வது பெரிய ராணுவம் என்ற பெயர் எடுத்திருந்தாலும், அனைத்து வீரர்களுக்குப் போதுமாகப் பாதுகாப்பு மற்றும் சேவையை அளிக்க முடியாத நிலையிலேயே உள்ளது மத்திய அரசு. இத்தகைய சூழ்நிலையில் ஆயுத கொள்முதல் அல்லது தயாரிப்பில் கூடுதல் முதலீட்டைச் செய்துவிட்டு, வீரர்களின் எண்ணிக்கையைச் சிறிதளவு குறைக்கலாம்.
சீனா..
சீனாவும் இதேபோன்ற நிதி பிரச்சனையை 1985, 1997, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் சந்தித்தது. இப்போது தான் சீனா ஆயுத உற்பத்தியில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வீரர்களின் எண்ணிக்கை குறைத்தது.
வாய்ப்புகள்
இதேபோன்ற முறையை இந்தியாவும் கையாள வாய்ப்புகள் உண்டு, இல்லையெனில் பிற துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்துவிட்டு 2 - 2.5 சதவீதம் என்ற சராசரி அளவில் நிதியை ஒதுக்கீடு செய்யவும் வாய்ப்புகள் அதிகம்.
இதில் மத்திய நிதியமைச்சகத்தின் திட்டம் என்ன என்பதைப் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பார்ப்போம்.