பொதுமக்கள் மிகவும் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள சூழ்நிலையில் வரி செலுத்துவோர், நிறுவனங்கள், மற்றும் தொழில் துறையினரின் பட்ஜெட் காய்ச்சலும் எகிற தொடங்கி விட்டது. வரி செலுத்துபவர்கள் வரி விகிதங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என எதிர்பார்க்கின்றனர். தொழில் துறையினர் ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்படுமா என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில், இந்தப் பட்ஜெட் மத்திய பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட். எனவே இதில் மக்களைக் கவரும் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என எதிபார்க்கபடுகின்றது. அதோடு இந்தப் பட்ஜெட் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வரும் முதல் பட்ஜெட் ஆகும்.
இப்பொழுது நம்முடைய கவனத்தை நிதிச் சந்தை பக்கம் சிறிது திருப்புவோம். கடந்த சில மாதங்களாகப் பங்குச் சந்தைகள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி பெருமளவு குறைந்து விட்டது. எனவே முதலீட்டாளர்கள் பல்வேறு விதமான நிதிச் சந்தைகளை முயற்சிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் கவனம் இப்பொழுது பரஸ்பரநிதி சந்தைப் பக்கம் திரும்பி வருகின்றது. அத்தகைய முதலீட்டாளர்கள் பட்ஜெட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
கடந்த சில காலமாகப் பரஸ்பர நிதியானது, சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. இதன் மீதான நம்பிக்கை மற்றும் அது கையாளும் நிதி வளர்ந்து வரும் நிலையில், பரஸ்பர நிதிச் சந்தை பட்ஜெட்டில் இருந்து பல்வேறு விஷயங்களை எதிர்பார்க்கின்றது. அந்த எதிர்பார்ப்புகளாவன:
1. வருமான வரிச்சட்டப் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கிற்கான உட்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும்:
யூலிப் திட்டங்கள் பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்குகின்றது. இந்த யூலிப் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்குப் பிற திட்டங்களை விட அதிக வருவாயை வழங்குகின்றன. இந்தப் பரஸ்பர நிதித் திட்டங்கள் மூன்று வருட கால அவகாசத்தில் வெளியிடப்படுகின்றது. மேலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 80C பிரிவு 1.5 இலட்சம் வரை முதலீட்டாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கிறது. முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வரிச் சலுகைகள் கிடைக்கக்கூடிய வகையில், இந்த விலக்கு வரம்பு 2 லட்சத்திற்கு அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தொழில் துறையினரிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது வரி செலுத்துவோருக்கு அதிகப் பணத்தை மிச்சப்படுத்தி, அந்தப் பணத்தைப் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தும்.
2. கடன்கள் / ஹைபிரிட் நிதித் திட்டங்களை 80C பிரிவின் வரி விலக்கு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்:
கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் கடன் / நிலையான வருவாய் பிரிவுகளில் முதலீடு செய்கின்றன. ஹைபிரிட் நிதிகள் கடன் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றது. பழமைவாத முதலீட்டாளர்களின் முதன்மையான விருப்பமாகக் கடன் மற்றும் ஹைபிரிட் பரஸ்பர நிதிகள் இருக்கின்றன. ஈஎல்எஸ்எஸ் (ஈக்ஸிட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம்) திட்டத்திற்கு மட்டுமே வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ 1.5 இலட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எல்எஸ்பிஎஸ் திட்ட நிதி பெரும்பாலும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகின்றது. எனவே பாரம்பரிய முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்யப் பெரும்பாலும் தயங்குகின்றனர். எனவே இந்தப் பக்ஜெட்டில் கடன் / கலப்பின பரஸ்பர நிதிகளை 80C பிரிவின் கீழ் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்வது முதலீட்டாளர்களுடன் ஆர்வத்தை அதிகரிக்கும்.
3. ஓய்வூதியத் திட்டங்களைத் தொடங்க பரஸ்பர நிதிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்:
இந்தியாவில் உள்ள சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஓய்வூதியத் திட்டங்களைத் தொடங்க அனுமதி பெற்றுச் சந்தையில் வழங்கி வருகின்றன. ஆனால் இந்த நிதிகள் முதலீட்டாளர்களைக் கவரவில்லை. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் ஓய்வூதியத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஓய்வூதியத்திற்காக மட்டுமே பிரத்தியேகமான நிதித் திட்டங்களைத் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும். இது சில்லறை முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால ஓய்வூதிய திட்டமாக இருக்க வேண்டும். இந்த நிதித் திட்டங்கள் பங்கு மற்றும் கடன் ஆகிய இரண்டும் கலந்த கலவையாக இருக்கும். போர்ட்ஃபோலியோவில் கடன் திட்டங்களுக்கான ஒதுக்கீடு முதலீட்டாளர்களின் வயதைச் சார்ந்து அதிகரிக்கும்
4.எந்தவொரு பரஸ்பர நிதி முதலீட்டிலும் ஃபோலியோ எண்ணாது ஆதார் எண்ணாக மாற்றப்பட வேண்டும்:
ஒரு முதலீட்டாளர் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் போது, அந்த நிதி நிறுவனத்தால் ஒரு ஃபோலியோ எண் வழங்கப்படுகின்றன. அந்தந்த பரஸ்பர நிதி நிறுவனத்தில் உள்ள உங்களுடைய முதலீடுகளை அடையாளம் காண இந்தத் தனிப்பட்ட எண் உதவுகின்றது. இந்தத் தனித்துவமான எண் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு இடையே வேறுபடுகிறது. எனவே ஒரு முதலீட்டு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு முதலீட்டாளர் முதலீட்டை மாற்றும் பொழுது மிகவும் சிரமமாக இருக்கின்றது. எனவே முதலீட்டாளர்களுக்குத் தொந்தரவாக இல்லாதபடி, பாதுகாக்கப்பட்ட ஆதார் எண்ணை எந்தவொரு பரஸ்பர நிதி முதலீட்டிற்கும் ஒரு ஃபோலியோ எண்ணாக மாற்ற வேண்டும்.
5. ஆதார் ஓடிபி மூலம் முதலீடு செய்யப்படும் போது ஒரு வருடத்திற்கு ரூ. 50 ஆயிரம் என்கிற உச்ச வரம்பை அகற்ற வேண்டும்:
வழக்கமான KYC செயல்முறை என்பது KYC படிவத்தை முதலீட்டாளர் கையொப்பம் இட்டு முகவரிச் சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். தனி நபர் சரிபார்ப்பு (IPV) என்பது தகுதி வாய்ந்த நபரால் செய்யப்பட வேண்டும். கே.கே.சி செயல்முறை பேப்பர் வடிவத்தில் இருக்கும் காரணத்தினால், அதற்கு மாற்றாக eKYC செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயல்முறையில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இதைப் பயன்படுத்தி eKYC செயல்முறையை வாடிக்கையாளர்கள் நிறைவேற்றலாம். எனினும் ஆதார் மூலம் மேற்கொள்ளப்படும் eKYC செயல்முறையில் ஒரு முதலீட்டாளர் பரஸ்பர நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படும் ஒரு திட்டத்தில் அதிகபட்சமாக ரூ 50 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஆதார் பல்வேறு செயல்முறைகளை எளிமையாக்கி வருகின்றது. எனவே இந்தச் செயல்முறையில் உள்ள ரூ 50 ஆயிரம் என்கிற உச்ச வரம்பை நீக்க வேண்டும். அல்லது அதிகரிக்க வேண்டும்.