இந்திய டெலிகாம் துறையைப் புரட்டிபோட்ட ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனத்தின் ஜியோ, தனிப்பட்ட முறையில் கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்து 2 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
இந்தியாவில் தற்போது கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்ய ஆர்வம் கொண்ட மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இதனை உணர்ந்த மோசடியாளர்கள் ஜியோவின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் இறங்கியுள்ளனர்.
இணையதள மோசடி
கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டை இணையம் வாயிலாகச் செய்ய ஏதுவாக அமைந்துள்ள நிலையில் இளைய தலைமுறையினருக்கு இதன் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சில மோசடி கும்பல் reliance-jiocoin.com என்ற பெயரில் இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.
விபரங்கள்
இந்த இணையதளத்தில், இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான தளம், ஒரு ஜியோ காயினின் ஆரம்ப விலை 100 ரூபாய் என அறிவித்துப் பெயர் மற்றும் ஈமெயில் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
முடங்கியது
இணையத் தளம் பொதுத் தளத்திற்கு வந்த உடனேயே பிரபலம் அடைந்தது இதனால் மோசடியாளர்கள் இத்தளத்தை முடக்கியுள்ளது. தற்போது இத்தளம் இயங்கவில்லை என்பது முக்கியமான தகவல்.
விழிப்புணர்வு
இணையதளத்தில் பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஆகையால் சற்று கவனிப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணையதள மோசடிகள் குறித்துத் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ
டெலிகாம் சந்தையை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்தாகக் கிரிப்டோகரன்சி சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளாதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த விதமான அறிவிப்பையும் இதுவரை ரிலையன்ஸ் குழுமம் வெளியிடவில்லை.
மேலும் reliance-jiocoin.com குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
50 பேர் கொண்ட குழு
ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் முகேஷ் அம்பானியின் மூத்த மகனாக ஆகாஷ் அம்பானி தலைமையில் 50 பேர் கொண்ட இளைஞர் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இக்குழு ரிலையன்ஸ் ஜியோ கிரிப்டோகரன்சி சந்தையில் இறங்குவதற்கான பணிகளையும், வாய்ப்புகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இக்குழு கிரிப்டோகரன்சியை உருவாக்கும் கடினமான பிளாக்செயின் டெக்னாலஜியை பயன்படுத்துவது எப்படி என்பதையும் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சப்ளை செயின்
பிளாக்செயின் டெக்னாலஜியை கொண்டு கிரிப்டோகரன்சியை உருவாக்குவதைத் தவிரச் சப்ளை செயின் அதாவது சரக்கு போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தும் ஒரு மென்பொருளை உருவாகவும் முடியும் எனவும் அறியப்படுகிறது. ஒருவேளை கிரிப்டோகரன்சி இல்லையென்றால் ஜியோவின் அடுத்தத் துறை லாஜிஸ்டிக்ஸாகவும் இருக்கலாம்.