2017ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் போராட்டமான காலம் என்றே சொல்ல வேண்டும் காரணம் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் களையப் பல மாதங்கள் ஆனாது.
இதையடுத்த உடனடியாக நாட்டின் மறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றும் ஜிஎஸ்டி வரியை அமலாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து மாற்றங்களை அறிவித்து வர்த்தகச் சந்தையைப் பதற்றமான சூழ்நிலையிலேயே வைத்திருந்தது.
இதனால் வேலைவாய்ப்பு, வர்த்தகம், மக்கள் மத்தியில் குழப்பம், எனச் சொல்லிக்கொண்ட போகலாம். இத்தகைய சூழ்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலை என்ன..? என்பதை விளக்குகிறது மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை.
ஜிடிபி வளர்ச்சி
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிடிபி பாதிப்புகள் அதிகமாக இருந்த 2017-18 நிதியாண்டு காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சி 6.75 சதவீதம் வரையில் உயரும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
அதேபோல் 2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7-7.5 சதவீதம் வரையில் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டுகளில் தற்போதைய 6.75 சதவீதத்தை விடவும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதிப் பற்றாக்குறை
கடந்த நிதியாண்டுகளில் அதிகமாக இருந்த நிதிப் பற்றாக்குறை 2017-18ஆம் நிதியாண்டில் 3.2 சதவீதமாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
கடந்த 4 நிதியாண்டுகளில் 2017-18ஆம் நிதியாண்டில் நாட்டில் நுகர்வோர் பணவீக்கம் மிகவும் குறைவான அளவீட்டைப் பதிவு செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இது 4.5 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இது 3.3 சதவீதமாகக் குறையும் என மத்திய நிதியமைச்சகம் கணித்துள்ளது.
ஆனால் மொத்த விலை பணவீக்கம் 2017-18ஆம் நிதியாண்டில் அதிகப்படியான அளவான 2.9 சதவீதத்தை அடையும் எனத் தெரிகிறது. இது 2016-17இல் 1.7 சதவீதமாகவும், 2015-16இல் -3.7 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி வளர்ச்சி
2017-18ஆம் நிதியாண்டில் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி அளவு 12.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
அன்னிய நாணய இருப்பு
நாட்டின் வெளிநாட்டின் நாணய இருப்பு அளவீட்டை பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் இதன் அளவீடு 409.4 பில்லியன் டாவர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதன் அளவு 370.0 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொழிற்துறை வளர்ச்சி
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை இந்திய தொழிற்துறை வளர்ச்சியை அதிகளவில் பாதித்தது.
2016-17ஆம் நிதியாண்டில் 4.6 சதவீதமாக இருந்த தொழிற்துறை வளர்ச்சி, 2017-18ஆம் நிதியாண்டில் 3.2 சதவீதமாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உணவுதாணிய உற்பத்தி
2015-16ஆம் நிதியாண்டில் உணவுதாணிய உற்பத்தி 251.6 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2016-17இல் இதன் அளவு 275.7 மில்லியன் டன் அளவிற்கு உயர்ந்துள்ளது.