பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி செய்த 1.8 பில்லியன் டாலர் மோசடி, நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த மோசடிக்குப் பொறுப்பேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னரான உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ய வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
NOSTRO கணக்குகள்
பிஎன்பி வங்கியின் மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கி மவுனமாக இருப்பது எங்களுக்கு ஆச்சரியம் மட்டும் அல்ல அதிர்ச்சியும் அளிக்கிறது.
பிஎன்பி வங்கியின் NOSTRO கணக்குகளைச் சரியாகக் கண்காணிக்காமல் இருந்ததே இந்த மோசடிக்கு வழிவகுத்துள்து என அனைத்து இந்தியா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சி.ஹெச்.வெங்கடாசலம் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி கிளையில் தான் இந்த 11,300 கோடி ரூபாய் அளவிலான மோசடி நடந்துள்ளது. இந்த வங்கி கிளை ஏ பிரிவு பன்னாட்டு பரிமாற்ற வங்கி கிளை என்பதால் இதனைச் சரியான முறையில் கவனித்திருந்தாலே மோசடியைத் தடுத்திருக்க முடியும்.
பணியைச் சரியான முறையில் செய்யாமல் இருந்ததே இந்த மோசடிக்குக் காரணம் என வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
உர்ஜித் பட்டேல்
இந்த மோசடி நடந்ததற்கு முழுமையான காரணம் ரிசர்வ் வங்கியின் மெத்தனம் தான், இதனை ஏற்றுக்கொண்டு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் உடனடியாகப் பணியை விட்டு விலக வேண்டும் எனத் தெரிவித்தார் வெங்கடாசலம்.
தொடர் ஆய்வுகள்
பிஎன்பி வங்கி நிர்வாகக் குழுவில் ரிசர்வ் வங்கியின் உறுப்பினர்கள் உள்ளனர். இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் ஆர்பிஐ ஆய்வு செய்து வரும் நிலையில் இந்த மோசடியை கண்டுபிடிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மறுசீரமைப்பு
இதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தை முழுமையாக மறுசீரமைப்புச் செய்து நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் சரியான முறையில் இயக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வெங்கடாசலம் கூறியுள்ளார்.