பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாயிலாக வைர வியாபாரியான நீரவ் மோடி 11,400 கோடி ரூபாய் வரையிலான மோசடி செய்துள்ளதை தொடர்ந்து. அமலாக்கத்துறை இந்த மோசடி வழக்கை கையில் எடுத்து நீரவ் மோடிக்குச் சொந்தமான அனைத்து இடத்திலும் சோதனைகளை நடத்தி வருகிறது.
அடுத்தச் செக்..
இதுவரை நடந்த சோதனையின் மூலம் 6,393 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்தச் சோதனையின் அடுத்தகட்டமாக அமலாக்க துறை முக்கிய நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.
6 நாடுகள்
11,400 கோடி ரூபாய் மோசடியில் முக்கிய நபராக இருக்கும் நீரவ் மோடிக்கு 6 நாடுகளில் சொத்துகள் உள்ளது. இதனைக் கைப்பற்ற பணச் சலவை சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை Letters Rogatory சான்றிதழை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
சொத்துக்கள் கைப்பற்றல்..
அமலாக்கத்துறைக்கு ஒப்புதல் கிடைத்தால் ஹாங்காங், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்ரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நீரவ் மோடியின் சொத்துகளைக் கைப்பற்றுவது மட்டும் அல்லாமல் இங்கு இருக்கும் ஆதாரங்களையும் பெற முடியும். இந்த ஆதாரங்கள் வழக்கின் விசாரணைக்குப் பெரிய அளவில் உதவி செய்யும் என அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
முக்கியக் குறிப்பு..
நீரவ் மோடியின் மோசடி வழக்கை கையில் எடுத்த அமலாக்க துறை, இவர் பாலீஷ் மற்றும் பாலீஷ் செய்யப்படாத வைரங்களை வர்த்தகம் செய்ததாகவும், தனிப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வைர நகைகளைத் தயாரித்தாகவும், விற்பனை செய்யும்போது அதனை நீரவ் மோடி மற்றும் பையர்ஸ்டார்ஸ் பெயரில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
நீரவ் மோடி ஹாங்காங், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்ரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளிலும் வர்த்தகம் செய்துள்ளார். இங்கு இருக்கும் நிறுவனங்களின் பெயரிலேயே Letters of Undertaking (LoUs) பெற்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் மோசடி செய்துள்ளார்.
மெஹூல் சோக்சி
இந்த மோசடியில் நீரவ் மோடியின் மாமா-வான மெஹூல் சோக்சியும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். இவர் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
6,393 கோடி ரூபாய்
அமலாக்க துறை கைப்பற்றிய 6,393 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களில் நீரவ் மோடியுடையது மட்டும் அல்லாமல் மெஹூல் சோக்சி உடையச் சொத்துகளும் அடக்கம்.
மொத்த மோசடி..
நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாயிலாகச் செய்த மோசடியின் தொகை மட்டும் 20,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.