மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கி வரும் ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டோம் என்று அறிவித்துவிடுங்கள் என்று மனு அளித்துள்ள நிலையில் தங்களது முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டி வருவது மட்டும் இல்லாமல் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இண்ட்ரா சர்கிள் ரோமிங் சேவையைத் தொடர்ந்து பெறுவது குறித்தும் விவாதித்து வருகிறது.
தொடர்ந்து நெட்வொர்க் சேவையை வழங்கத் தேவையான முக்கிய சேவை வழங்குநரிடமும் ஏர்செல் நிறுவனம் விவாதித்து வருவதாகவும் இது குறித்து விவரம் அறிந்தவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
15,500 கோடி கடன்
ஏர்செல் நிறுவனம் 15,500 கோடி ரூபாய் கடனில் இருப்பதால் தொடர்ந்து சேவை வழங்குவதில் குளறுபடி நடந்து வந்தால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் நிறுவனத்தினை விட்டு வெளியேறி விடுவார்கள்.
உத்தி
மேலே கூறிய சிக்கல்களை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே திவால் ஆகியதாக அறிவித்துவிடுங்கள் என்று ஏர்செல் நிறுவனம் மனு அளித்துள்ளது. இதனால் நிறுவனத்தினை விற்க அல்லது தொடர்ந்து சேவை வழங்க நேரம் கிடைக்கும் மற்றும் கடனையும் அடைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஏன் இந்தச் சிக்கல்?
இந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள போட்டியினைச் சமாளிக்க முடியாமல், இலவசங்களை அளிக்க முடியாமல் தான் ஏர்செல், ஆர்காம், டெலினார் உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.
டவர் பிரச்சனை
மறுபக்கம் ஏர்செல் நிறுவனத்திற்குக் கடன் அளிப்பதை நிறுத்தியவர்கள் தற்போது ஓர் அளவிற்கு நிதியை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் இதனால் சேவையினைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருத்தாகவும் அதிக அழுத்தத்தினைக் குறைக்கவே திவால் ஆகிவிட்டதாக அறிவிக்க மனு என்று நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
மேக்சிஸ்
சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஏர்செல் நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்துள்ள மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் கடன் பெற்றுள்ளவர்களிடம் இருந்து வரும் அழுத்தத்தினைக் குறைக்கவே திவால் ஆனதாக அறிவித்துள்ளது.
ஆனந்த கிருஷ்ணன்
மலேசிய தொழில் அதிபரான டி ஆனந்த கிருஷ்ணன் ஏர்செல் நிறுவனத்தில் இதுவரை 7 பில்லியன் அமெரிக்க டாலரினை முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.