சர்வதேச சந்தையில் பொருளாதார நெருக்கடி உருவான 2008ஆம் ஆண்டில் உலகின் அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் சிக்கி மாட்டிக்கொண்ட நிலையில், இந்தியா மட்டும் இதில் தப்பித்துக்கொண்டது.
இது உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீது பொறாமை உருவாகவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. ஆனால் இன்று..?
2008 நிதி நெருக்கடி
சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பித்ததற்கு முக்கியமான காரணம், முன்னணி பொருளாதார நாடாக இந்தியா இருந்தாலும் இந்திய வங்கிகளின் அதன் வராக்கடன் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. இது மிகப்பெரிய வலிமையாக இந்தியாவிற்கு அமைந்தது.
முதலீடு
இதன் பின் இந்திய வங்கிகளிலும், பங்குச்சந்தையிலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர். இன்றளவு பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு முக்கிய முதலீட்டுத் தளமாக இருப்பது வங்கித்துறை பங்குகள்.
ஜி20 நாடுகள்
இந்திய வங்கிகளில் 2009ஆம் நிலவரத்தின் படி வராக் கடன், செயற்படா சொத்துக்கள் அளவு மொத்த கடனில் வெறும் 2.21 சதவீதமாக மட்டுமே இருந்தது. இது ஜி20 நாடுகள் மத்தியில் மிகவும் குறைவான அளவு.
இதுவே 2008ஆம் ஆண்டு நிதிநெருக்கடியில் இருந்து தப்பிக்க முக்கியக் காரணமாக இருந்தது.
2017 நிலவரம்
இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் இந்திய வங்கிகளில் வராக் கடன் அளவு மொத்த கடனில் 9.73 சதவீதமாக உள்ளது. இது ஜி20 நாடுகள் மத்தியில் இத்தாலி, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிக வராக் கடனை வைத்துள்ளது.
மட்டமான கணக்கீடு
இந்த நிலைக்கு முக்கியமான காரணம் வங்கிகளின் மட்டமான நிர்வாகம் மற்றும் மோசமான கணக்கீட்டு முறைகளும், முறைகேடுகளும் தான்.
வெடிக்கும்..
இந்தப் பிரச்சனை இப்போது தான் வெடிக்கத் துவங்கியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் போதும் மிகப்பெரியதாக வெடிக்கும். 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பல நிறுவனங்கள் திவாலானது போல், இந்தியாவிலும் திவால் ஆகலாம்.
இதனை முன்கூட்டியே கவனித்துக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் கண்டிப்பாகப் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.