மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product -GDP) என்பது நாட்டின் பொருளாதாரச் செயல்திறனை மதிப்பிடப் பயன்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்நாட்டில் உற்பத்தியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் பணமதிப்பை ஜிடிபி குறிக்கிறது.
ஜிடிபி ஏன் அவ்வளவு முக்கியம்?
குடிமக்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்கள் கூட நேரிடையாக ஜிடிபியால் பாதிக்கப்படுகின்றன.
இந்த அளவு குறியீட்டை கொண்டுதான் அரசு போதுமான வேகத்தில் வளராத பொருளாதாரத்தை ஊக்குவிக்க மேலும் பணத்தை முதலீடு செய்யலாமா, வேண்டாமா என முடிவெடுக்கப்படும்.
வணிகத்தில், ஜிடிபியை கருத்தில் கொண்டு, உற்பத்தி மற்றும் சேவை செயல்பாடுகளை விரிவுபடுத்தலாமா என முடிவுசெய்யப்படும். முதலீட்டாளர்களும் கூட, முதலீடு சம்பந்தமான முடிவுகளை , இதைப் பார்த்தே எடுப்பார்கள்.
இந்திய ஜிடிபி-க்கான தகவல் திரட்டுகள்
இந்தியாவில் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் ஜிடிபி-யை கணக்கிடுகிறது. இது, புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது தகவல்களைத் திரட்டி, புள்ளிவிவர ஆவணங்களாகப் பராமரிக்கிறது.
அதன் பல்வேறு பணிகளுக்கிடையில், ஜிடிபி மற்றும் இதர புள்ளிவிவரங்களைக் கணக்கிட, குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கெடுப்பு நடத்துவது மற்றும் தொழிலக உற்பத்தி குறியீடு, நுகர்வோர் விலை குறியீடு, மொத்தவியாபார விலை குறியீடு போன்ற குறியீடுகளைத் தொகுக்கும் பணியையும் செய்கிறது.
இந்தியா முழுவதும்
இது பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள், துறைகளை ஒருங்கிணைத்துத் தகவல்களைத் திரட்டுகிறது.எடுத்துக்காட்டாக, தொழிலக உற்பத்தி குறியீடுக்கான தரவுகள், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் , தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின், தொழிலகப் புள்ளியியல் அலகு வழங்குகின்றது.
இந்தியாவின் ஜிடிபி-யை கணிக்கிடும் முறை
இந்தியாவில் நான்கு முறைகளில் ஜிடிபி கணக்கிடப்படுகிறது.
1) காரணி விலையைப் பொறுத்து (At factor cost) - பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்து
2) சந்தை விலையைப் பொறுத்து (At market price) - செலவுகளைப் பொறுத்து
3) பெயரளவிலான ஜிடிபி (Nominal GDP) - நடப்பு சந்தை விலையைப் பொறுத்து
4) உண்மையான ஜிடிபி (Real GDP)- பணவீக்கத்தைப் பொறுத்து
இந்த நான்கு முறைகளிலும் ஜிடிபி வெளியிடப்படும். ஆனால் காரணி விலை என்பது, ஊடகங்களால் சொல்லப்படுவது.
துறைகள்
குறிப்பிட்ட காலத்தில், நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்படும் மொத்த மாற்றங்களைக் கொண்டு ஜிடிபி கணக்கிடப்படுகிறது. முடிவு +7% எனில், அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பில் சராசரியாக 7% வளர்ச்சி எனப் பொருள்.
8 துறைகள் ஜிடிபி கணக்கிட கருத்தில் கொள்ளபடுகின்றன.
விவசாயம், வனம் மற்றும் மீன்வளத்துறை
சுரங்கம் மற்றும் குவாரிகள்
உற்பத்தித் துறை
மின்சாரம், எரிவாயு, குடிநீர் விநியோகம் மற்றும் இதர சேவைகள்
கட்டுமானம்
வர்த்தகம், உணவுவிடுதி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புச் சேவைகள்
நிதி, வீட்டுமனை, தொழில்முறை சேவைகள்
பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர சேவைகள்
கால அளவுகள்
இந்திய ஜிடிபி-யானது, காலாண்டு, ஆண்டுக்கொரு முறை எனக் கணக்கிடப்படுகிறது. அதன் அறிக்கைகள் 2 மாத இடைவெளியில் வெளியிடப்படும். உதாரணமாக, டிசம்பரில் முடிந்த காலாண்டின் அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும்.