டெல்லி: அதார் கார்டுடன் இணைக்கப்பட வேண்டிய பல சேவைகளுக்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நீட்டித்துச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. சென்ற வாரம் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட வேண்டிய சேவைகளுக்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31-ம் தேதியில் இருந்து நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கிய ஆலோசனையினை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அதார் இணைப்பு குறித்து அடுத்த முறை தீர்ப்பு அளிக்கும் வரை ஆதார் எண்ணுடன் மொபைல் எண், அரசு நல திட்டங்கள், வங்கி போன்ற பல சேவைகளில் இணைக்க வேண்டிய தேதியானது 2018 மார்ச் 31-ல் இருந்து நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் எப்போது தீர்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பார்த்தல் மக்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் எண் போன்றவற்றுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. எனவே மக்களுக்கு இந்தக் காலக்கெடு நீட்டிப்பு குறித்த தீர்ப்பானது மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உச்ச நீதிமன்றம் ஆதார் சட்டத்தில் உள்ள சிக்கல் மற்றும் அதார் இணைக்கப்படாததால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவில்லை போன்ற காரணங்களால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றை எல்லாம் விசாரித்து முடித்துத் தீர்ப்பை வழங்க நீண்ட காலம் ஆகும் என்பது மட்டும் உறுதி.