இந்தியாவின் முன்னணி பயணிகள் விமான சேவை அளிக்கும் நிறுவனமான இண்டிகோ-வின் 42 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமானப் பயணிகள் குறித்த நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
42 விமானங்கள்
மார்ச் 14ஆம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் மும்பை, கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், சென்னை, டெல்லி, டேராடூன், அம்ரித்ஸர், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் இருக்கும் சுமார் 42 விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.
பிரச்சனை
இந்நிறுவனத்தின் 8 A320நியோ ரக விமானங்களும், 3 கோஏர் விமானத்தின் பிராட் & விட்னி என்ஜின் பிரச்சனையின் காரணமாக இந்த விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை
நேற்று ஒரு நாளில் மட்டும் இண்டிகோ மற்றும் கேர்ஏர் நிறுவனங்களின் சுமார் 65 பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்..?
பிராட் & விட்னி நிறுவனம் தான் நியோ ரக விமானத்தின் என்ஜின்களைத் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் என்ஜின் நடுவானில் முடங்கிய காரணத்தால் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இதர சோதனைகளுக்காக விமானப் போக்குவரத்து அமைப்பான DGCA இரு நிறுவனங்களின் 11 விமானங்களைத் தரையிறக்க உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கை
விமானப் பயணங்களின் ரத்துக் காரணமாகப் பயணிகள் கடுமையான பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பயணிகளின் பயணங்கள் பாதிக்காத அளவிற்குத் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.