விவசாயத் துறையை மேம்படுத்தவும், விளைச்சலில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக வழங்கப்படும் பயிர்கடன் மற்றும் காப்பீடு விவசாயிகளுக்குச் சரியான சென்றடையவில்லை என்று கருத்து நிலவி வந்தாலும், மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து நிதியை உட்செலுத்தியுள்ளது.
இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பயிர்கடனுக்குத் தமிழக அரசு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
முன்னோடி
இந்தியாவின் முன்னணி வர்த்தக மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி அனைத்து மாநிலங்களின் ஈர்ப்பைப் பெற்றது. இதன் பின்னர் இதே பார்மூலாவை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றியது.
இந்நிலையில் அடுத்த உலக முதலீட்டாளர் மாநாட்டைச் சிறப்பான முறையில் நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு
2019 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் முதலீட்டு மானியத்தின் அளவை 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயிர்க்கடன்
2018-19ஆம் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்குச் சுமார் ரூ. 8000 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடன் வழங்கப்படும் எனத் தமிழகப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மானியத்துக்கு ரூ6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ. 70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளது.
பேரிடர் நிவாரணம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு இயற்கை சீற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் பிரச்சனைகளை விரைவில் களையவும், நிதி நெருக்கிடி ஏற்படாத வகையில் மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ. 786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்திக்கடவு-அவினாசி
தமிழக மக்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு, தமிழகப் பட்ஜெட்டில் அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.