நியூ யார்க்: இந்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களால் விரைவில் சில துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது அந்த நிறுவனங்களுக்கு அளித்து வரும் மானியத்தினை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வர்த்தகப் போரினை தொடுத்துள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்கப் பங்கு சந்தையானது 5 சதவீதம் வரை சரிவை சந்தித்த நிலையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து அதிகளவில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்கள் மீதான வரியினை உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் சீன நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்தன. தற்போது அதுவே இந்தியா மீது ஏற்றுமதிக்கும் அளிக்கப்படும் மானியம் மூலமாகத் திரும்பியுள்ளது.
மானியம்
இந்திய அரசு ஸ்டீல் பொருட்கள், பார்மா பொருட்கள், இராசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள், ஜவுளி பொருட்கள் போன்றவற்றை ஒரு நிறுவனம் ஏற்றுமதி செய்யும் போது அதனை ஊக்குவிக்கச் சில வரிகள் மற்றும் கட்டணங்கள் மீது மானியத்தினை அளிக்கிறது.
பாதிப்பு
இந்தியா மானியம் அளிப்பதினால் அமெரிக்க நிறுவனங்களை விடக் குறைவான விலையில் இந்திய நிறுவனங்களால் விற்க முடிகிறது அதனால் அமெரிக்க ஊழியர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பு
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பானது இந்திய அரசு எதற்கெல்லாம் மானியம் அளிக்கிறது என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அவை:
1) மெர்ச்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ஃப்ர்ம் இந்தியா திட்டம்
2) எலக்ட்ரானிக்ஸ், ஹார்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் திட்டம் உட்பட ஏற்றுமதி சார்ந்த அலகுகள் திட்டம் மற்றும் துறை சார்ந்த குறிப்பிட்ட சில திட்டங்கள்;
3) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்;
4) ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனத் திட்டம்;
5) ஏற்றுமதியாளர்கள் திட்டத்திற்கான கடமை இலவச இறக்குமதி.
உலக வர்த்தக அமைப்பு
ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது உலக வர்த்தக அமைப்பு உடனான ஒப்பந்தத்தின் கீழ் தான் செய்ய முடியும். உலக வர்த்தக அமைப்புடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள சில ஒப்பந்தங்கள் முடிவடைந்தும் சில துறைகளில் மானியம் வழங்கி வருகிறது என்றும் அது மட்டும் இல்லாமல் இந்தத் திட்டங்களின் அளவை அதிகரித்துள்ளது என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் விதிகள் என்ன கூறுகிறது?
இந்திய அரசு உலக வர்த்தக அமைப்புடனா ஒப்பந்தத்தில் உள்ளது படி ஏற்றுமதி விதிகளின் சில மானியங்களைத் திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. உலக வர்த்தக அமைப்பானது வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்களது நாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தினை ஊக்குவிக்கக் குறிப்பிட்டளவிலான சதவீதம் வரை அனுமதி அளிக்கிறது.
மானியத்தினை நிறுத்த வேண்டும்
ஆனால் சில துறைகளில் உலக வர்த்தக அமைப்பு அளித்துள்ள சதவீதத்தினை விட அதிகளவில் இந்தியாவின் வளர்ச்சி உள்ளதால் அந்தத் துறை சார்ந்த பொருட்கள் மீதான ஏற்றுமதி மானியத்தினை 8 வருடத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் இந்தியா தொடர்ந்து அளித்து வருகிறது என்பதே அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளின் குற்றச்சாட்டு.
இந்தியா
எனவே தற்போது அமெரிக்கா எழுப்பியுள்ள பிரச்சனைகளால் உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அரசால் குறிப்பிட்ட சில துறைகள் மீது நீண்ட நாட்களுக்கு மானியம் அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா மிது எடுத்துள்ள மிகப் பெரிய வர்த்தக போராக பார்க்கப்படுகிறது.