இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபர் நிறுவனத்தின் ஓட்டுனர்கள் மார்ச் 18ஆம் தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் போராட்டம் மும்பை, டெல்லி, பெங்களுரூ, ஹைதரபாத், புனே மற்றும் நாட்டின் முக்கியமான நகரங்களில் ஓட்டுனர்களின் போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை
ஓலா, உபர் ஆகிய நிறுவனங்கள் வர்த்தகத் துவக்கத்தில் வர்த்தகத்தை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வதற்காக ஓட்டுனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையை அளித்தது. ஆனால் தற்போது இரு நிறுவனம் ஓட்டுனர்களையும் ஏமாற்றி வருகிறது.
1.5 லட்சம் வருமானம்
ஓலா, உபர் நிறுவனத்தில் இணையும் ஓட்டுனர்கள் குறைந்தபட்சம் 5-7 லட்சம் வரையிலான முதலீட்டை செய்கின்றனர். இப்படிச் சேரும் ஓட்டுனர்களுக்கு மாதம் 1.5 லட்சம் வரையிலான வருமானம் கிடைக்கும் என நம்பிக்கை கொடுத்திருந்தது.
ஆனால் இப்போது இத்தொகையில் பாதிக் கூடக் கொடுப்பதில்லை என இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வழிநடத்தும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை
ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்கள் கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இயங்குகிறது. இதனால் இந்தக் கார்களுக்கு மட்டுமே ஓலா மற்றும் உபர் முன்னுரிமை அளித்து வருகிறது.
மும்பை
ஓலா மற்றும் உபர் நிறுவனங்களில் கீழ் சுமார் 45,000 கார்கள் இயங்கி வருகிறது. ஒட்டுனர்களின் பிரச்சனையின் காரணமாக மும்பையில் மட்டும் சுமார் 20 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.