பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் விலையில் வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறிவந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அதன் முதற்கட்டமாக டீசல்-ஐ வீட்டிற்கு டெலிவரி செய்யும் திட்டத்தினை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எனவே இனி எலக்டிரானிக்ஸ், மளிகை பொருட்கள் மட்டும் இல்லாமல் டீசலும் வீடு தேடி வரும்.
இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்தியன் ஆயில் நிறுவனம் புனேவில் சோதனை முயற்சியாக டீசலை வீட்டிற்கே டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது. அங்கு வெற்றி அடையும் பட்சத்தில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களிலும் இந்தத் திட்டமானது அமலுக்கு வரும்.
விநியோகம் செய்யும் வாகனம்
டீசல் விநியோகம் செய்யும் வாகனத்தினை டிவிட்டரில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தச் சேவைக்காகப் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சிறிய டேங்கர் லாரியில் எண்ணெய் விநியோகிக்கும் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான்
சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் குறைக்கப் பெட்ரோல் மற்றும் டீசலை வீட்டிற்கே டெலிவரி செய்ய இருப்பதாகத் தெரிவித்து இருந்தார்.
டீசல்
ஆனால் தற்போது டீசலை நிர்வகிப்பது எளிது என்பதால் பெட்ரோல் இல்லாமல் டீசல் மற்றும் டெலிவரி செய்யும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல்
அடுத்தகட்டமாகப் பெட்ரோலை வீட்டிற்கு டெலிவரி செய்யும் திட்டத்திற்காகப் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து பணிபுரிந்து வருவதாகவும் சஞ்சிவ் தெரிவித்துள்ளார்.
முதல் முறை அல்ல
இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டிற்கு டீசல் டெலிவரி செய்வது முதல் முறை அல்ல. 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏஎன்பி எண்ணெய் நிறுவனம் இதனைச் செய்த போது பாதுகாப்பு காரணங்களுக்காக அதனைப் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு நிறுத்தியது.
குழப்பங்கள்
டீசல் ஹோம் டெலிவரி சேவை துவங்கப்பட்டு இருந்தாலும் எப்படி ஆர்டர் செய்வது, எவ்வளவு லிட்டர் பெறலாம் என்ற வரம்பு ஏதேனும் உள்ளதா, கூடுதல் கட்டணம் எவ்வளவு என்ற விவரங்கள் தெரியவில்லை.