ஜியோ நிறுவனத்தால் இந்திய டெலிகாம் சந்தையே தடமாறிப் போனது, வேண்டுமென்றே முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக எதிராக மிகவும் குறைவான விலையில் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளை அளித்துச் சிறு நிறுவனங்களை முடங்கச் செய்துள்ளது எனப் பலரும் பல விதமாக ஜியோ நிறுவனத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் டிராய் ஜியோவிற்குச் சாதகமாக இருக்கிறது என்றும் சில முக்கிய நிறுவனங்கள் பல முறையைக் கூறியுள்ளது.
ராக்கெட் வித்தை..
சொல்லப்போனால் ஜியோ செய்தது ராக்கெட் சயின்ஸ் எல்லாம் ஒன்றுமில்லை. சரியான திட்டமிடல் மற்றும் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக, இந்திய மக்களை அதிகளவில் ஈர்த்ததில் கிரிக்கெட் முதல் இடம் என்றால் அடுத்தது சினிமா. இதைக் கண்டுகொண்ட ஜியோ தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டிவி வாயிலாகத் திரைப்படத்தைப் பார்க்க வழி செய்துள்ளது.
3 காரணிகள்
இதை யாராலும் செய்ய முடியாதது இல்லை, சரியான கட்டணத்தில் சரியான சேவை கொடுத்தால் மக்கள் மத்தியில் கண்டிப்பாக வெற்றி அடையும்.
ஜியோ நிறுவனத்தில் முகேஷ் அம்பானி carriage-content-commerce என்ற 3 முக்கியக் காரணியை மையமாக வைத்து இயக்கி வருகிறார்.
முழுமை அடையவில்லை..
ஜியோ நிறுவனத்தின் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுச் சுமார் 18 மாதங்கள் ஆனாலும், இந்நிறுவனத்தின் சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாகச் சொல்லப்போனால் ஜியோ கொடுக்கும் டேட்டாவை மக்கள் முழுமையாகப் பயன்படுத்த சிறப்பான தளத்தை உருவாக்கியுள்ளது ஜியோ. இதனால் மக்கள் மத்தியில் டேட்டா தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதுவே ஜியோவின் அடிப்படை வர்த்தகம்.
ஒரு காலம்..
சில வருடங்களுக்கு முன்பு வெறும் 300 எம்பி டேட்டா வைத்துக்கொண்டு ஒரு மாதம் முழுவதும் பயன்படுத்தினோம் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஆனால் இன்று ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டா போதுமானதாக இல்லை.
ஜியோ வந்த பின்பு மக்கள் மத்தியில் டேட்டா தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர் மன மாற்றம்..
இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் பெருமளவில் தற்போது ஆரம்பத் திட்டமான 1.5 ஜிபி டேட்டா திட்டத்தில் இருந்து 2 ஜிபி திட்டத்திற்கும், 3ஜிபி திட்டத்திற்கும் மாறியுள்ளனர்.
புரட்சி 1
டெலிகாம் சந்தையில் ஜியோ மட்டும் தான் இத்தகைய புரட்சியைச் செய்ததா என்றால் இல்லை.
500 ரூபாய்க்கு மொபைல் போனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விற்பனை செய்யதது.
புரட்சி 2
2009ஆம் ஆண்டு 2.2 பில்லியன் டாலர் முதலீட்டு உடன் என்டிடி டோகோமோ நிறுவனத்துடன் டாடா குழுமம் இணைந்து டெலிகாம் சேவை வர்த்தகத்தைத் துவங்கியபோது இந்தியாவிலேயே முதல் முறையாக வாய்ஸ் கால்களுக்கு 1 நொடிக்கு 1 பைசா திட்டத்தை அறிமுகப்படுத்திப் பெரிய அளவிலான புரட்சியை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஜியோ பார்க்கப்பட வேண்டும்.
போட்டி நிறுவனங்கள்
ஜியோ போன்றே ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனம் 3 காரணி திட்டத்தில் சேவை வழங்கலாம் ஆனால் குறைவான விலையை அறிவிக்க வேண்டும்.
ஜியோ அறிமுகத்திற்கு முன்பு வரையில் இந்த நிறுவனங்கள் டெலிகாம் சேவையில் அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்தது மறுக்க முடியாது. ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்களுக்கு ஜியோ போல 3 காரணி சேவையை அளிக்க விருப்பமில்லை.
ஜியோக்குப் பின்..
ஐியோ அறிமுகத்திற்குப் பின்னும் சந்தைப் பங்கீட்டில் ஏர்டெல் முதல் இடத்திலேயே உள்ளது.
2வது மற்றும் 3வது இடத்தில் இருந்த வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைகிறது. பிஎஸ்என்எல் தற்போதைய சந்தை நிலைக்கு ஏற்கப் போட்டி திட்டங்களை அறிவித்துத் தனது வாடிக்கையாளர்களை இணக்கமாக வைத்துள்ளது.
ஆர்காம் மற்றும் ஏர்செல்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மூடப்படும் நிலையில் உள்ளது. டாடா டோகோமோ ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது, டெலிநார் நிறுவனம் விற்பனை செய்யப்பட உள்ளது.
கடைசியாக ஏர்செல் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தொடர் உயர்வு
ஜியோ அறிமுகத்திற்குப் பின்பு டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொபைல் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 116 கோடியாக உயர்ந்தள்ளது.
இதில் அதிகப்படியான வளர்ச்சி ஜியோ அறிமுகத்திற்குப் பின்பு ஏற்பட்டவை.
10 பில்லியன் டாலர்
இந்நிலையில் இந்திய டெலிகாம் துறை அடுத்த 5 முதல் 6 வருட வளர்ச்சிக்கு, 4ஜி விரிவாக்கம் மற்றும் 5ஜி சேவை அறிமுகத்திற்கும் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகை தேவைப்படுகிறது.
இதை யார் செய்கிறார்களோ இந்த நிறுவனம் தான் இந்திய டெலிகாம் துறையின் ராஜா.
கியோமியோன்னு கத்த வேண்டாம்..
டெலிகாம் சந்தையில் தற்போது குறைந்த விலையில் சிறப்பான சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் இருக்கும் வாய்ப்பைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதே உசிதம்.
ஆகவே முன்னணி நிறுவனங்கள் கியோமியோன்னு கத்தாமல் வேகமாக வாய்ப்பைப் பற்றிக்கொள்ளுங்கள்.