ஆதார் இணைப்பிற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் காலவரையின்றி நீட்டித்து இருந்தாலும் வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் அதார் எண் கட்டாயம் என்பது நீக்கப்படவில்லை என்பது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
2015-2016 மற்றும் 2016-2017 நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி வாய்ப்பு முடிய இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் ஆதார் எண் கட்டாயம் என்பது நீக்கப்படாமல் உள்ளது.
உச்ச நீதிமன்றம்
மார்ச் 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்புக் கட்டாயம் என்று அரசு கூறிவந்த அனைத்துத் திட்டங்களுக்கும் காலவரையின்றிக் காலக்கெடுவை நீட்டிப்பதாகவும், அதார் குறித்த அனைத்துக் குழப்பங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கும் முடிவு எடுக்கப்பட்ட பிறகு இணைவு குறித்துத் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வருமான வரி தாக்கல்
ஆனால் ஆதார் இணைப்பினை செய்யாமல் வருமான வரியினைத் தாக்கல் செய்ய முடியாது என்று வருமான வரி துறை இணையதளம் கூறுவதால் வரி தாக்கல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
நேரடி வரி விதிப்பு ஆணையம்
இது குறித்து மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் தலைவர் சுஷில் சந்திராவை தொடர்புகொள்ளத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் முயன்ற போது தொலைப்பேசி அழைப்புகளை அவர் ஏற்கவில்லை. ஆனால் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் இந்தச் சிக்கல் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் சரி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம்
வருமான வரித் துறை ஆதார் இணைப்பினை கட்டாயம் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருமானால் உயர் நீதிமன்றத்தினை நாடலாம் என்று சட்ட வல்லுனர்கள் கூறிவருகின்றனர்.
வருமான வரி தாக்கல் செய்ய அதார் விலக்கு பெற்றுள்ளவர்கள்
இந்திய குடிமக்கள் அல்லது ஒரு வருடத்தில் 182 நாட்களுக்கும் அதிகமாக இந்தியாவில் வசிப்பவர்கள் ஆதார் இணைப்பினை செய்யாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. அதே நேரம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் வரி தாக்கல் செய்ய, அசாம், ஜம்மு & கேஷ்மிர் மற்றும் மேகாலயாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்(80 வயதுக்கும் அதிக உள்ளவர்கள்) ஆதார் எண் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.