கடந்த ஒரு ஆண்டாக டெலிகாம் துறையில் ஏற்பட்ட நிறுவனங்களின் இணைவு மற்றும் போட்டி காரணமாக ஆயிரம் கணக்கான ஊழியர்கள் வேலை வாய்ப்பினை இழந்த நிலையில் வர இருக்கும் 5 ஆண்டுகளில் 1 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் டெலிகாம் துறை திறன் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது டெலிகாம் துறையில் 40 லட்சம் ஊழியர்கள் உள்ள நிலையில் டெலிகாம் பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் அடுத்த 5 ஆண்டுகளில் 1.43 கோடியாக அதிகரிக்கும் என்று டெலிகாம் துறை திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி கோச்சார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வேலை இழப்பு
சென்ற வருடத்தில் இருந்து டெலிகாம் துறையில் ஏற்கனவே 40,000 நபர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் என்றும் இது அடுத்த 6 முதல் 9 மாதங்களில் 90,000 நபர்களாக அதிகரிக்கும் என்றும் அன்மையில் வெளியான மனிதவள அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மெஷின் - மெஷின் தொடர்புகள்
டெலிகாம் பொருட்கள் தயாரிப்பு, கட்டுமானம் மற்றும் சேவை நிறுவனங்களில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான மெஷின் - மெஷின் தொடர்புகள் போன்றவற்றில் திறன் படைத்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோச்சார் கூறியுள்ளார்.
டெலிகாம் சாதனங்கள் தயாரிப்பு
டெலிகாம் சாதனங்கள் தயாரிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்த்து வருகிறோம், இதனை வைத்துப் பார்க்கும் போது திறன் படைத்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். டெலிகாம் துறை வளர்ச்சி வரும் நாட்களில் மிகப் பெரியதாக இருக்கும் 14.2 மில்லியன் நபர்கள் பணிப்புரிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி
டெலிகாம் துறை திறன் மேம்பாட்டு ஆணையம் அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை வழங்கும் திட்டங்களை வகுத்து வருகிறது என்றும் அதற்கான அனுமதியினை அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டவர் சேவை அளித்து வரும் நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாவும், நாங்கள் பயிற்சி அளிக்க அவர்கள் சாதனங்களை வழங்குவார்கள். அதனை வைத்துப் பயிற்சி பெற்றவர்கள் எளிதாக அந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறுவார்கள். இதுபோன்ற சூழல் இன்னும் ஒரு வருடத்திற்குள் நடைமுறைக்கு வரும் என்றும் கோச்சர் கூறினார்.