இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி சேவை அளிக்கும் ஓலா தனது சக போட்டி நிறுவனமான உபர்-ஐ வாங்கத் திட்டமிட்டு வருகிறது.
வர்த்தகப் போட்டி மற்றும் குறைவான லாபம் காரணமாக ஆசிய சந்தையில் வர்த்தகத்தில் இந்தியாவைத் தவிரப் பிற அனைத்து நாடுகளில் இருந்தும் வெளியேறியுள்ளது உபர். இந்நிலையில் இந்திய வர்த்தகத்தை வாங்க ஓலா திட்டமிட்டு வருகிறது.
ஆதிக்கம்
தென் கிழக்கு ஆசிய சந்தையில் சிங்கப்பூர், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளின் சேவைகளைக் கிராப் நிறுவனத்திற்கு உபர் விற்பனை செய்துள்ளது.
இப்பகுதிகளில் கிராப் நிறுவனத்தின் ஆதிக்கம் மிகவும் அதிகம் என்பதால் உபரால் வர்த்தகத்தைப் பெற முடியவில்லை, இதனால் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
பங்கு விற்பனை
இந்த விற்பனையின் மூலமாகக் கிராப் நிறுவனத்தின் 27.5 சதவீத பங்குகளை உபர்-க்கு கிடைத்துள்ளது. இதனால் உபர் சிஇஓ தாரா கிராப் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களில் ஒருவராக இருக்கப்போகிறார்.
முதலீட்டாளர்
கிராப் மற்றும் உபர் நிறுவனங்கள் மத்தியிலான இந்தப் பங்கு விற்பனை எளிதாக முடிய முக்கியக் காரணம் இரு நிறுவனத்திலும் முதலீடு செய்திருந்த சாப்ட்பேங்க் தான்.
சாப்ட்பேங்க் வாயிலாகவே வர்த்தகம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆசிய சந்தையில் மீதமுள்ள இந்தியா மட்டும் தான்.
இந்திய வர்த்தகம்
உபரின் இந்திய வர்த்தகத்திலும் சாப்ட்பேங்க் நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்துள்ள நிலையில், ஓலா இதனைப் பயன்படுத்தித் தனது ஆஸ்தான முதலீட்டாளரான சாப்ட்பேங்க் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆலோசனை நிறைவேற்றப்பட்டால் ஓலா நிறுவனம் உபரின் இந்திய வர்த்தகத்தை வாங்கும்.
ஓட்டுனர்கள் பிரச்சனை
இந்தியாவில் முக்கிய நகரங்களில் மட்டும் வர்த்தகம் செய்யும் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களை எதிர்த்து ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓலா தான் ராஜா..
ஓலா, உபரின் இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றினால் இந்திய ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் ஓலா தான் ராஜா.