மத்திய அரசு புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்கள் மிதான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் 2018 ஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டில் அளிக்கப்பட்டுள்ள விகித லாபமே அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது
இதனால் தேசிய சேமிப்புப் பத்திரம், பிபிஎப் போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வங்கி முதலீடுகளை விட அதிக லாபம் கிடைக்கும். மேலும் வங்கிகளில் குறுகிய கால வைப்பு நிதிக்கு வட்டி உயர்த்தப்பட்ட நிலையில் சிறு சேமிப்பு திட்டம் மீதான வட்டி அதிகரிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தனர்.
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தேசிய சேமிப்புப் பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா, பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் போன்றவற்றில் 2018-2019 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
பிபிஎப் மற்றும் என்எஸ்சி
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் ஆகிய திட்டங்களில் 2018 ஏப்ரல் முதல் 2018 ஜூன் வரை 7.6 சதவீதமாக வட்டி விகித லாபம் அளிக்கப்படும்
கிசான் விகாஸ் பத்திரா
கிசான் விகாஸ் பத்திரா திட்டம் கீழ் முதலீடு செய்தவர்களுக்கு 7.3 சதவீதமாக வரும் காலாண்டில் வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.
செல்வ மகள் திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதம் 7.3 சதவீதமாக அளிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் மூத்த குடிமக்களுக்கு 8.3 சதவீத வட்டி விகிதம் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு
தபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதமும் 4 சதவீதமாகத் தொடருகிறது.
வட்டி விகிதம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. அரசு பத்திரங்கள் கீழ் கிடைக்கும் லாபத்தினை வைத்துச் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.