உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான், வர்த்தக வளர்ச்சியை மையமாக வைத்துப் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் டிரம்ப், அமேசான் நிறுவனத்திற்கு எதிராகப் போட்ட டிவீட்களால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு தாறுமாறாகச் சரிந்து வருகிறது.
இந்நிலையில் அமேசான் தனது வர்த்தகத் திறனை மேம்படுத்தும் விதமாகச் சர்வதேச வர்த்தகத்தில் மறுசீரமைப்புச் செய்து வருகிறது.
பணிநீக்கம்
நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை என்றால் இதில் முக்கியமாக ஊழியர்கள் பணிநீக்கம் இருக்கும். அமேசான் நிறுவனத்திலும் தற்போது பணிநீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் தனது வர்த்தகம் இருக்கும் அனைத்து இடத்திலும் மறுசீரமைப்பு இருக்கும் நிலையில், இந்தியாவில் முதலாவதாக ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
இந்தியா
கடந்த வாரம் அமேசான் இந்தியாவில் recruitment அணியில் இருக்கும் 60 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல அணிகளில் ஊழியர்கள் பணிநீக்கம் இருக்கும் எனவும் இந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைத்திறன் மேம்படுத்தும் திட்டம் (PIP)
அதுமட்டும் அல்லாமல் அமேசான் கடந்த வருடத்தை விடவும் சுமார் 25 சதவீத அதிக ஊழியர்களைத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்த்துள்ளது. இதனால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
சர்வதேச வர்த்தகம்
அமேசான் நிறுவனம் இந்த 60 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்த நிலையில், எங்களுடைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் கொண்டு வந்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே இது எனவும் அமேசான் தெரிவித்துள்ளது.
அமேரிக்கா
அமெரிக்காவின் சியாடில் பகுதியில் இருக்கும் அமேசன் தலைமை அலுவலகத்திலும் 100க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது .
4000 வேலைவாய்ப்புகள்
மேலும் அமேசான் தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 4,000 வேலைவாய்ப்புகள் அறிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யும் அதேவேளையில் புதிதாக ஊழியர்களையும் எடுக்கவும் முடிவு செய்துள்ளது அமேசான்.