இந்திய நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் இன்று படித்த இளைஞர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, இவர்கள் தன் வாழ்வில் அடுத்தகட்டத்திற்குச் செல்ல ஒரு டிரம்ப் கார்டாக இருப்பது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தான்.
இதற்கு அமெரிக்காவின் டிரம்ப் முதல் பிரிட்டன், ஆஸ்திரலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் முட்டுக்கட்டையாக விளங்கி வருகிறது.
கனவுகள் மாயமானது..
இந்தியாவில் இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்குச் சொந்த வீடு வாங்குவதற்கு அடுத்ததாக இருக்கும் மிகப்பெரிய கனவு என்றால் வெளிநாடு வேலை என்று சொன்னால் மிகையாகாது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய நாடுகள் தற்போது வெளிநாட்டு ஊழியர்கள் தன் நாட்டில் வந்து பணிபுரிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது, இதனால் இந்தியர்களின் வெளிநாட்டு கனவு சிதைந்து வருவது கண்முன்னே தெரிகிறது.
இந்திய பெற்றோர்கள்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறுவது கடந்த சில வருடங்களாகவே கடினமாக இருக்கும் நிலையில், இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கத் துவங்கியுள்ளனர்.
பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் எனத் திட்டமிடும் பெற்றோர்களின் எண்ணிக்கை 2016இல் 47 சதவீதமாக இருந்த நிலையில், 2017இல் 62 சதவீதமாக உயர்ந்துள்ளது என ஹெச்எஸ்பிசி ஆய்வறிக்கை கூறுகிறது.
இது வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற ஒரு பாதையாகவே இந்தியர்கள் பார்க்கிறார்கள்.
முக்கிய நாடுகள்
இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்பும் 3 முக்கிய நாடுகளில் அமெரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெறுகிறது.
இப்போது இந்த 3 நாடுகளும் கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதின் மூலம் இந்தியர்கள் இந்த நாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவது கடினமாகியுள்ளது.
என்ன காரணம்
இந்தியர்களைக் குறிவைத்து வெளிநாடுகள் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க என்ன காரணம்.
தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து நாடுகளில் உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்சனை, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, வெளிநாட்டு மக்களின் கலாச்சாரப் பிரச்சனை தற்போது அதிகரித்துள்ளது.
விசா
இதில் முக்கியமாக அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை வல்லரசு நாடுகளுக்குப் பெரிய தலைவலி என்றும் சொல்லாம்.
இதன் காரணமாகவே தன் நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளும் வெளிநாட்டு மக்களின் வரவைக் குறைக்க இத்தகைய விசா கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது.
ஐடி ஊழியர்கள்
தற்போது விதிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் மூலம் அதிகம் பாதிக்கப்படப் போவது ஐடி மற்றும் டெக் துறையில் இருக்கும் ஊழியர்கள் தான்.
நிறுவனங்கள் அதிக வருவாய், ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் கிடைக்கும் காரணத்தால் வெளிநாட்டு ஐடி வேலைகள் மீது மக்கள் மற்றும் நிறுவனங்கள் ஈர்க்கிறது.
வரலாறு
மேற்கத்திய நாடுகளில் தொழிற்துறை புரட்சி வெடித்த போது, உலகளவில் டெக்ஸ்டைல் துறையில் முடிசூடா மன்னனாக இருந்த இந்தியாவே வெளிநாட்டில் இருந்து துணிகளை இறக்குமதி செய்யப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் பெரிய அளவில் உற்பத்தி செய்யத் தகுந்த மலிவான இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் தான்.
இங்கிலாந்து நாட்டின் இயந்திரங்களும் மற்றும் தொழில்நுட்பமும் தான் இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணமாக இருந்தது.
ஐடி துறை
இதேபோன்ற சூழ்நிலை தான் தற்போது ஐடித்துறைக்கும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய மோசமான நிலையைச் சமாளிக்கவே இந்திய ஐடி நிறுவனங்களின் 60 சதவீத வெளிநாட்டு மென்பொருள் ஏற்றுமதி வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ள விசா கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவிலேயே புதிய அலுவலகங்களைத் திறந்து அதிகளவிலான அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகளவில் குறையும்.
அடிப்படை சம்பள உயர்வு
இந்திய ஐடி ஊழியர்களின் முக்கிய இலக்காக இருக்கும் அமெரிக்கா வேலைவாய்ப்புகளைப் பெற (இந்திய ஐடி நிறுவனங்களின் வாயிலாக) சில வருடங்கள் முன்பு வரையில் எளிமையாக இருந்தது.
டிரம்ப் வந்த பின்பு ஹெச்1பி விசா பெறுவதற்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்து இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இப்படிஎந்தெந்த நாடு எப்படியெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்து இந்தியர்களின் வெளிநாட்டுக் கனவு சீர்குலைத்துள்ளது.
ஹெச்1பி விசா
மார்ச் மாதத்தில் USCIS அமைப்பு ப்ரீமியம் ஹெச்1பி விசா முறையைத் தற்காலிகமாக நிறுத்திய நிலையில் அக்டோபர் 2018 முதல் செப்டம்பர் 2019 வரையிலான 2019ஆம் நிதியாண்டுக்கான விசா விண்ணப்பத்தை ஏப்ரல்1 முதல் USCIS அமைப்பு பெற துவங்கியுள்ளது.
USCIS அமைப்பு
ஹெச்1பி விசா விண்ணப்பங்களைச் சரிபார்த்து விசாவை அளிக்கும் USCIS அமைப்புக், 2019ஆம் நிதியாண்டுக்கான விசா விண்ணப்பங்களில், குறிப்பாக ஹெச்1பி விசா விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் போது ஜிரோ டாலரென்ஸ் முறையைக் கையாள முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளது.
சிறு தவறுகள் இருந்தால் கூட விசா விண்ணப்பத்தை ரத்துச் செய்யத் தயங்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக USCIS அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறை
அமெரிக்க அரசு திருத்தி அறிவிக்கப்பட்டுள்ள ஹெச்1பி விசா பெறுவதற்கான புதிய விதிமுறையில், 3ஆம் தரப்பு நிறுவனங்களில் வேலை செய்வதற்காகச் செல்லும் ஒரு ஹெச்1பி விசா ஊழியர் சிறப்புப் பணியைத் தனிப்பட்ட திறன் கொண்ட அந்த ஊழியரால் செய்ய முடியும் என்பதை விசாவிற்காக விண்ணப்பிக்கும் நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த 7பக்க ஹெச்1பி விசா விதிமுறையில், ஹெச்1பி விசா பெறும் ஊழியர், தான் வேலை செய்யச் செல்லும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் பணிபுரியும் காலத்திற்கு மட்டுமே விசா வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
முன்கூடியே ஒப்புதல்
ஹெச்1பி விசாவிற்காக விண்ணப்பிக்கும் ஊழியருக்கு, அமெரிக்காவில் இருக்கும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் பணிபுரிய ஒப்புதல் முன்கூடியே அளிக்கப்பட வேண்டும்.
விசா வழங்கப்படும் காலத்திற்கு ஹெச்1பி விசா ஊழியருக்கும், 3ஆம் தரப்பு நிறுவனத்திற்கும் இடையில் நேரடியாக ஊழியர் மற்றும் நிறுவனர் என்ற உறவு இருக்க வேண்டும்.
புதிய மசோதா
கடந்த வாரம் அமெரிக்காவின் Ohio மாகாணத்தைச் சேர்ந்த செனட்டர் ஷெர்ராடு பிரவுன் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார், கால் சென்டர் வேலைவாய்ப்புகளை அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களின் பட்டியலை சேகரித்து, அந்த நிறுவனங்கள் உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெடரல் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பெருமளவிலான வேலைவாய்ப்புகள் நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இடத்தைத் தெரிவிக்க வேண்டும்
வாடிக்கையாளர் சேவையில் அதிகம் இருப்பது கால் சென்டர் வேலைவாய்ப்புகள். இந்த மசோதாவில் வாடிக்கையாளர் கால் சென்டர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளும் போது அதிகாரியின் தான் இருக்கும் உண்மையான இடத்தைத் தெரிவிக்க வேண்டும்.
மேலும் வாடிக்கையாளர் அமெரிக்கச் சேவை தளத்திற்கு அழைப்பை மாற்றச் சொன்னால் எவ்விதமான மறுப்புமின்றிக் கால்களை மாற்ற வேண்டும் எனவும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன்
அமெரிக்காவிற்கு அடுத்தாக இந்தியர்கள் அதிகம் விரும்பு பிரிட்டன் நாட்டிலும் இந்தியர்களைக் குறிவைத்து விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் கடைசியில் பிரிட்டன் அரசு 2ஆம் தர ICT பிரிவின் கீழ் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அதிகத் திறன் மற்றும் அனுபவம் இருந்தால் மட்டுமே பிரிட்டனில் வேலைக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
போராட்டம்
இந்த விதிமுறைகளை எதிர்த்து இந்தியர்களும் பிற நாட்டவர்களும் தொடர்ந்து பிரிட்டனில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
457 விசா
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்ற உதவும் 457 விசா முறையை ஆஸ்திரேலியா அரசு நிரந்தரமாகத் தடை செய்துள்ளது.
அமெரிக்காவில் ஹெச்1பி விசா போல ஆஸ்திரேலியாவில் 457 விசா முறை வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சொல்லப்போனால் இந்தியர்களும் இந்திய நிறுவனங்களும் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு விசா முறை. இதைச் சில முக்கியக் காரணங்களுக்காக ஆஸ்திரேலியா அரசு நிரந்தரமாகத் தடை செய்து வழக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
புதிய விசா முறை
இந்நிலையில் 455 விசா முறைக்குப் பதிலாகப் புதிய விதிமுறைகளுடனும், பெயருடன் TSS விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TSS என்றால் தற்காலிக திறன் தட்டுப்பாடு (Temporary Skill Shortage) என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
டிஎஸ்எஸ் விசா முறையில் நிரந்தரக் குடியுரிமை பெற நினைக்கும் வெளிநாட்டவர்களுக்கு இப்புதிய விசாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்
அதேபோல் இப்புதிய விசா மூலம் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் தேர்வாகியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டில் வேலைக் கிடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக 2 வருட அனுபவம் தேவைப்படுகிறது. இதனால் இந்திய மாணவர்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட உள்ளனர்.
நிறுவனங்களுக்குச் சிக்கல்
இப்புதிய விசா முறையில் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றால் நிறுவனம் skilling Australia fund திட்டத்திற்கு, ஒரு ஊழியருக்கு, ஒரு வருடத்திற்கு 1,200 டாலர் செலுத்த வேண்டும்.
ஆக 4 வருட விசாவில் ஒரு ஊழியரைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றால் நிறுவனம் 4,800 டாலர் செலுத்த வேண்டும். இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் இது 2,41,152 ரூபாய் (23 மார்ச்).
சிங்கப்பூர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வொர்க் பர்மிட்-ஐ வழங்கத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாட்டுக்களை விதித்து வருகிறது சிங்கப்பூர். இந்தியாவின் பல பெரிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை சிங்கப்பூரில் உள்ளது.
எம்பிளாய்மென்ட் பாஸ்
திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்ற வேண்டுமென்றால் எம்பிளாய்மென்ட் பாஸ் மூலம் பணியாற்றலாம். இதைவாங்கக் குறைந்தபட்சம் 3,600 சிங்கப்பூர் டாலர் சம்பளமாகப் பெற வேண்டும். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.6 லட்சம் ரூபாய். இது 2014ஆம் ஆண்டில் 3,300 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து
அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய முன்னணி நாடுகளைத் தொடர்ந்து நியூசிலாந்து நாடும் தன் நாட்டு மக்களுக்கு மட்டுமே அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.