மத்திய அரசு 2017-2018 நிதி ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 6.84 கோடியாக உயர்ந்து இருப்பதாகவும் இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 5.43 கோடி நபர்களாக இருந்ததாகவும், இது 26 சதவீத உயர்வு என்றும் தெரிவித்துள்ளது.
2016-2017 நிதி ஆண்டில் புதிதாக 85.51 லட்சம் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ததாகவும், இதுவே 2017-2018 நிதி ஆண்டில் 99.49 லட்சமாக உயர்ந்ததாகவும் இது 16.3 சதவீத வளர்ச்சி என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு 2017-2018 நிதி ஆண்டில் 1.49 லட்சம் கோடி ரூபாய் வரை திருப்பி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நிகர நேரடி வரி வசூல்
அரசு வெளியிட்டுள்ள தரவின் படி 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற நேரடி வரியை விட 2017-2018 நிதி ஆண்டில் 9.95 லட்சம் கோடி ரூபாய் என 17.1 சதவீதம் கூடுதலாக வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தனிநபர் வருமான வரி
தனிநபர் வருமான வரி தாக்கல் 18.9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதில் பங்கு பரிவர்த்தனை வரியும் அடங்கும்.
எண்ணிக்கை உயர்வு
கடந்த 4 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வுக்கான முக்கியக் காரணம் வரி செலுத்தாதவர்களின் விவரங்களை எடுத்து அவர்களுக்கு மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் கடிதம் மூலமாக வருமான வரித் துறை அறிவுறுத்தியதன் பேரில் தான் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
மாற்றம் இருக்கும்
வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரங்கள் நிலையானது இல்லை என்றும் இன்னும் வரி செலுத்தாமல் நிலுவையில் இருப்பவர்கள் செலுத்தும் போது தான் முழு விவரங்களும் தெரியவரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.