டெல்லி ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர் மகன் இன்று துபாய் நகரின் அடையாளமாக விளங்கும் புர்ஜ் கலிப்பாவில் வீடு வைத்திருக்கிறார். இது நியாயமாகச் சேர்த்த பணம் என்றால் அவருக்குச் சல்யூட் வைக்கலாம், ஆனால் இது மக்களை ஏமாற்றிச் சேர்த்த பணத்தில் பெறப்பட்டது.
ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து புர்ஜ் கலிப்பாவில் வீடு வாங்கும் அளவிற்கு அமித் பர்தவாஜ் எப்படி 2000 கோடி ரூபாய் மோசடி செய்தார்..?
இன்போசிஸ் ஊழியர்
நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இனபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அமித் பர்தவாஜ், எல்லோரையும் போலவே பங்குச்சந்தை வர்த்தகத்தின் மீது ஈர்க்கப்பட்டார். இதன் மூலம் ஒரு புறம் மென்பொருள் வல்லுனராகவும், மறு புறம் பங்குச்சந்தை முதலீட்டாளராகவும் இருந்துள்ளார்.
பிட்காயின்
சமீபகாலத்தில் ஆகச்சிறந்த முதலீடாகக் கருதப்பட்ட பிட்காயின் தற்போது சரிவு பாதையில் உள்ளது, சுருக்கமாகச் சொன்னால் 2017இல் ஒரு பிட்காயின் மதிப்பு இந்தியாவில் 11 லட்சத்தைத் தாண்டிய நிலையில் இன்று 4.15 லட்சமாக உள்ளது.
சில வருடங்களுக்கு முன் பிட்காயின் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்த நிலையில், இந்த மோகத்தைச் சாதகமாகப் பயன்படுத்த திட்டமிட்டார் அமித்.
போலியான திட்டம்
இதற்காக அமித் பிட்காயின் அடிப்படையாகப் போலி முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கி மக்களிடம் அதனைக் கொண்டு சென்று நம்பவைத்தார். இதில் பல ஆயிரம் பேர் மயங்கி முதலீடு செய்தனர்.
நம்பிக்கை
அமித் பரத்வாஜ் உருவாக்கிய திட்டத்தில் ஒரு பிட்காயின் வாங்கினால், 18 மாதத்திற்கு ஒவ்வொரு மாதமும் 10 சதவீத லாபம் அளிப்பதாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
ஆக 18 மாதத்தில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகும். இதுதான் மக்களை ஈர்த்த மிகப்பெரிய காரணி.
பிட்டெக்ஸ்
மேலும் இந்தப் பரிமாற்றங்கள் அனைத்தும் பிட்டெக்ஸ் என்னும் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு வர்த்தகத் தளத்தில் இருந்து செய்யப்பட்ட காரணத்தால் ரூபாய் வழியிலான பரிமாற்றம் எதுவும் இல்லை, இதனால் வரியும் மிச்சம் என்பது இதன் மீதான முதலீட்டுக்கு மக்களை ஈர்க்க முக்கியக் காரணமாக அமைந்தது.
கூடுதல் லாபம்
இதுமட்டும் அல்லாமல் முதலீட்டாளர் கூடுதலாக லாபமாக, மல்டி லெவல் மார்கெட்டிங் வடிவில் இந்நிறுவனத்திற்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால் சில சலுகையும், பரிசும் கிடைப்பதாக அறிவித்துப் பலரை ஏமாற்று வலையில் விழ வைத்துள்ளது.
இதன் வாயிலாகப் பல முதலீட்டாளர்கள் ஆரம்பக் கட்டத்தில் கமிஷனாகப் பல ஆயிரங்களைப் பெற்றுள்ளனர்.
பை ஸ்டார் ஹோட்டல்
அமித் பரத்வாஜ் உருவாக்கிய இந்தக் கெயின்பிட்காயின் நிறுவனத்திற்கு மக்களை ஈர்க்க பை ஸ்டார் ஹோட்டல்களில் பல கூட்டங்களை நடத்தியும் ஈர்த்துள்ளார், இதற்குச் சில பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
3 முறையிலான திட்டங்கள்
கெயின்பிட்காயின் நிறுவனத்தில் 3 வகைத் திட்டம் இருந்தது,
1. முதலீட்டுக்கு 18 மாதம் 10 சதவீதம் லாபம்
2. ஒரு முறை முதலீட்டில் புதிய நபர்களை நிறுவனத்தில் சேர்ப்பதன் மூலம் கமிஷன்
3. பிட்காயின்களை உருவாக்குவதில் (Mining) வருமானம்
மோசடி
ஆனால் அமித் பரத்வாஜ் தலைமையிலான கெயின்பிட்காயின் முதலீட்டாளர்களுக்குக் கொடுத்த நம்பிக்கையை உடைத்தது மட்டும் அல்லாமல் பிட்காயின் பெரிய அளவிலா உச்சத்தை அடையும் போது முறையற்ற வகையில் அமித் முதலீட்டாளர்களிடம் நடந்துகொண்டுள்ளார்.
10 மடங்கு
நினைத்தை விடவும் பிட்காயின் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்த நிலையில் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு சுமாக் 10 மடங்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமித் சிக்கிக்கொண்டார். இதனாலேயே அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார்.
செயலி
மேலும் பிட்காயின் விலை மதிப்புகள் இந்நிறுவனம் வழங்கிய செயலியில் கண்காணிக்கும் வகையில் இருந்த நிலையில், நிறுவனம் கொடுத்த வாக்குறுதிக்குக் கொடுத்த தொகை பதிவேற்றம் செய்யப்படவில்லை. இங்குதான் முதலீட்டாளர்களுக்குச் சந்தேகம் எழுந்தது.
பல கோடிகள்
அமித்-இன் கெயின்பிட்காயின் நிறுவனம் அறிவித்த 3 திட்டங்கள் மூலம் பெரிய அளவிலான தொகையைப் பெற்றார். இதன் மூலம் இந்தியா, வெளிநாடு எனப் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கியுள்ளார் அமித்.
புகார்
அமித் மற்றும் கெயின்பிட்காயின் ஏமாற்றுவதை உணர்ந்த முதலீட்டாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் துவங்கினர்.
2,000 கோடி ரூபாய்
இதன் மூலம் அமித் பரத்வாஜ் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை மக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளார்.