இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி சென்ற வாரம் என்ஆர்ஐ-களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலமாகப் பணத்தினை அனுப்பும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
சோஷியல் பே எனப்படும் இந்தப் பணப் பரிமாற்ற சேவை இந்திய வங்கிகளுக்கு முதன் முறையாகும். இதற்காகவே மனி2இந்தியா என்ற செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சமுக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவது மற்றும் தகவல்களைப் பகிர்ந்து வரும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்தச் சமுக வலைத்தளங்கள் மூலமாகப் பணம் செலுத்தும் முறையானது அறிமுகம் செய்யப்படுகிறது என்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மனி2இந்தியா
மனி2இந்தியா செயலியை நிறுவியுள்ளவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எளிதாகப் பணத்தினை அனுப்பலாம்.
பாதுகாப்பானதா?
மனி2இந்தியா மற்றும் சமுக வலைத்தளப் பணபரிமாற்ற சேவையினை வங்கியின் பாதுகாப்பான சேனல் மற்றும் தகவல் தனியுறிமை தொழில்நுட்பங்கள் உதவியுடன் வழங்கப்படுகிறது.
இந்த முறையில் பணத்தினைப் பரிமாற்றம் செய்யும் போது இரண்டு வகையான அங்கீகரிப்புகளைச் செய்தால் தான் வெற்றிகரமாகப் பாதுகாப்பாகப் பரிவர்த்தனை செயல்படும்.
மனி2இந்தியா செயலியை எப்படிப் பயன்படுத்துவது?
படி 1
M2I செயலியில் உள்நுழைந்து, எவ்வளவு பணம் என்பதை உள்ளிட்டு, சோஷியல் பே என்பஹ்டை தேவு செய்து 4 இலக்க பாஸ்கோடு ஒன்றை உருவாக்கி, பணம் அனுப்புவதற்கான வங்கி கணக்கை தேர்வு செய்ய வேண்டும்.
படி 2
செயலியில் நீங்கள் தேர்வு செய்துள்ள சமுக வலைத்தளத்தில் பகிர்வதற்கு ஏற்ற இணைப்பு ஒன்று உருவாக்கப்படும். பயனர் தாங்கள் உருவாக்கிய பாஸ் கோடு எண்ணைத் தனியாகப் பயனாளிக்கு அளிக்க வேண்டும்.
படி 3
பரிவர்த்தனையினை முழுமை படுத்த பணத்தினைப் பெற இருக்கும் பயனாளி தங்களது வங்கி கணக்கு விவரங்களைக் கொடுக்கப்பட்ட இணைப்பின் உதவியுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இணைப்பினை கிளிக் செய்து 4 இலக்குப் பாஸ் கோடு-ஐ உள்ளிட்ட பிறகு தான் வங்கி கணக்கை சமர்ப்பிக்க முடியும்.
படி 4
பணத்தினைப் பெற இருப்பவர் அவரது வங்கி விவரங்களை இணைப்பில் அளித்த உடன் M2I செயலி பயனருக்கு தகவல் தெரிவிக்கப்படும். பின்னர்ச் சரியான நபருக்குத் தான் பணம் அனுப்புகிறோமா என்பதை உறுதி செய்த பிறகு உறுதி செய்த உடன் எளிதாகப் பணம் பயனாளியை சென்றடையும்.