சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சியோமி தனது உற்பத்தி அளவை இரட்டிப்பாக்கவும், அரசு விதித்துள்ள ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் மீதான 10 சதவீத இறக்குமதி வரியில் இருந்து தப்பிக்க உற்பத்தி ஆலைகளை அதிரடியாக விரிவாக்கம் செய்துள்ளது.
தொழிற்சாலை
இந்தியாவில் ஏற்கனவே பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து 2 உற்பத்தி ஆலைகளை வைத்துள்ள சியோமி தற்போது புதிதாக 3 ஆலைகளை ஆந்திராவின் ஸ்ரீசிட்டி, தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.
மேலும் சிறிய அளவிலான உற்பத்தி ஆலையை ஹைபேட் நிறுவனத்துடன் இணைந்து நொய்டாவில் வைத்துள்ளது சியோமி.
முதலீடு
இப்புதிதாக அமைக்கப்பட உள்ள தொழிற்சாலைகளுக்கான முதலீட்டு அளவுகள் குறித்து எவ்விதமான தகவல்களையும் சியோமி இந்தியா தலைவர் மனு ஜெயின் தெரிவிக்கவில்லை.
உற்பத்தித் திறன்
இந்தியாவில் இருக்கும் 6 தொழிற்சாலைகள் மூலம் சியோமி ஒரு நொடிக்கு 2 மொபைல் போன்களைத் தயாரிக்க முடியும் என்றும், இதன் மூலம் 10,000 இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிலும் முக்கியமாக 95 சதவீதம் பேர் இதில் பெண்கள் என மனு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர்
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள தொழிற்சாலையில் மொபைல் போன் தயாரிப்பின் முக்கிய அங்கமாக விளங்கும் பிசிபி அசம்பிளியை தயாரிக்கும் ஆலையை ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட உள்ளது.
50 சதவீத தொகை
ஒரு மொபைல் போனில் 50 சதவீத தொகை பிசிபி அசம்பிளிக்காகச் செலவிடப்படும் நிலையில், இதனை இறக்குமதி செய்வதை விடவும் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது சியோமி. இதன் மூலம் 2019ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்துப் போன்களும் மேடு இன் இந்தியா தான்.