மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா அதிகளவிலான கடனில் இயங்கி வருவது மட்டுமல்லாமல், தொடர் நஷ்டத்தையும் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டது.
போட்டி
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்த இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் போட்டிபோட்டது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் ஏர் இந்தியாவை வாங்கத் திட்டமிட்டது.
இண்டிகோ
இந்நிலையில் மத்திய அரசின் ஏர் இந்தியா பங்கு விற்பனை செய்வது குறித்து முழுமையான ஆலோசனைக்கத் தகுந்த தலைமையில்லை என்ற காரணத்திற்காக இண்டிகோ நிறுவனம் இப்போட்டியில் இருந்து விலக்கிக் கொண்டது.
ஜெட் ஏர்வேஸ்
இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் போட்டியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.
நல்ல முடிவு
மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது சிறந்த முடிவு, மேலும் இந்தப் பங்கு விற்பனை குறித்த தகவல் அறிக்கையை ஆய்வு செய்யும் போது இப்போடியில் இருந்து விலக ஜெட் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளோம் என ஜெட் ஏர்வேஸ்-இன் துணை தலைமை நிர்வாகி அமித் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா
ஒரு காலத்தில் இந்தியாவிற்கு விமானச் சேவை அளிக்கும் ஓரே நிறுவனமாக ஏர் இந்தியா இருந்த நிலையில், காலப்போக்கில் போட்டி மற்றும் குறைந்த கட்டண சேவையின் காரணமாக ஏர் இந்தியா வர்த்தகத்தை இழந்து தற்போது தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
கடன் நெருக்கடி
அரசு தரவுகள் படி ஏர் இந்தியா சுமார் 7.67 பில்லியன் டாலர் அளவிலான கடனில் உள்ளது, இதனைச் சரி செய்ய மத்திய அரசும் சுமார் 5.8 பில்லியன் டாலர் அளவிலான நிதி உதவியை அளித்துள்ளது.
ஆனாலும் ஏர்இந்தியாவைச் சிறப்பான முறையில் இயக்கக் கூடுதலான இயக்க நிதி (Running Capital) தேவைப்படுகிறது. இதனால் ஏர்இந்தியா தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
இணைப்பு
சில வருடங்கள் முன்பு ஏர் இந்தியாவை ஸ்டார் அலையன்ஸ் உடன் இணைத்த பின்பு ஏர் இந்தியா கூடுதலான வர்த்தகத்தைப் பெற்றது.
பங்கு விற்பனை
வர்த்தகம் அதிகரித்தாலும் அதிக லாபம் வரும் நிலையில் ஏர் இந்தியா இல்லை, இதன் காரணமாகவே இந்நிறுவனத்தைத் தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதன் வாயிலாக மத்திய அரசு ஏர் இந்தியா சுமார் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.
யாருமே இல்லை..
நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஜெட்ஏர்வேஸ், ஏர் இந்தியாவை வாங்கும் திட்டத்தில் இருந்து விலகிய நிலையில் அடுத்து யார் முன்வருவார்கள்..?