இது எச்-1 பி விசாக்களுக்கான காலம். அமெரிக்க அரசு விண்ணப்பங்களைச் சென்ற திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்களை ஏற்க ஆரம்பித்ததிலிருந்து, அமெரிக்க நிறுவனங்கள் அதிகத் திறன் வாய்ந்த வெளிநாட்டுப் பணியாளர்களுக்காக விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆரம்பித்துள்ளன. அரசு பரிசீலனை மையங்களுக்கு லாரி லாரியாக விண்ணப்பங்கள் வந்துகொண்டு இருக்கின்றன.
எச்-1பி விசா அமெரிக்கக் கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்ததாக ஆதரவாளர்களால் கூறப்பட்டாலும், அமெரிக்கர்களுக்கு மாற்றாகக் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்க இந்த விசா பயன்படுவதாகக் குற்றச்சாட்டும் உள்ளது.
எச்1 பி விசா பெற்ற பணியாளர்களின் மனைவிகளுக்குச் சிறப்புப் பணி அனுமதி ஆணை வழங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.
எச்1பி விசா என்றால் என்ன?
தற்காலிக விசாவான இதன் மூலம் நிறுவனங்கள், 'சிறப்புப் பணிகளுக்கு'த் திறன் வாய்ந்த அமெரிக்கர்கள் கிடைக்காத நிலையில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு அந்தப் பணியிடங்கள் நிரப்ப முடியும். இந்தப் பணியாளர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள்(நீட்டிக்க வாய்ப்பு உண்டு) பணியாற்ற முடியும்.
விசா பெறுவது எப்படி?
நிறுவனங்கள் தாங்கள் பணியமர்த்த விரும்பும் பணியாளர்களைத் தேர்வு செய்து அவர்கள் சார்பாக விண்ணப்பிக்கும். அதில் பணியாளரின் தனித்திறன் மற்றும் பணியின் தன்மை குறித்த படிவங்களும் ஆவணங்களும் இருக்கும்.
எச்1பி விசா பெற்ற அனைவரும் தொழில்நுட்ப துறையினரா?
பெரும்பாலான மென்பொருள் வல்லுநர்கள், கணினி பொறியாளர்கள் மற்றுய் இதர பணியாளர்கள் தொழில்நுட்ப துறையைச் சார்ந்தவர்களே. எனினும் எச்1பி விசா பெற்றவர்கள் பிற துறைகளிலும் இருக்கின்றனர். அவர்கள் கட்டிட வடிவமைப்பாளர்கள், அறிவியலாளர்கள், மாடல்கள் மற்றும் டாட்டூ கலைஞர்கள். கிராமப்புற பள்ளிகளில் அமெரிக்கர்களைப் பணியமர்த்த இயலாமல், வெளிநாட்டுக் கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களும் இதில் அடக்கம்.
ஒவ்வொரு வருடமும் விநியோகிக்கப்படும் எச்1பி விசாக்களின் எண்ணிக்கை?
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 65,000 எச்1பி விசாக்களும், பட்டமேற்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்காகக் கூடுதலாக 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன.பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
குலுக்கல் முறையில் விண்ணப்பங்களைத் தேர்வு செய்வது ஏன்?
கடந்த பல வருடங்களாக, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை, அனுமதிக்கப்பட்ட விசா எண்ணிக்கையை விட அதிக அளவு விண்ணப்பங்களைப் பெற்றுவருகிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் 5 வேலை நாட்களில், அதிகபட்ச விண்ணப்ப எண்ணிக்கையை அடைந்தவுடன் குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசீலிக்கப்படும்.
இந்த விசா மூலம் நிரந்தரக் குடியுரிமை பெற இயலுமா?
இது அடிக்கடி நடைபெறும் ஒன்று தான். நிறுவனங்கள் எச்1பி பணியாளர்கள் நிரந்தரக் குடியுரிமை பெற ஆதரவாக இருக்கும். கீரீன் கார்டு விண்ணப்பங்கள் விரைவாக அங்கீகரிக்கப்பட்டாலும், கிரீன் கார்டு கிடைக்க வருடங்கள் பல ஆகும்.
அதிக வெளிநாட்டுப் பணியாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?
எச்1பி விசா பணியாளர்களில் 80% க்கு மேற்பட்டவர்கள் இந்தியாவில் இருந்தே வருகின்றனர். சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2016 நிதியாண்டில் பிலிப்பைன்ஸ், தென்கொரியா மற்றும் கனடா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
எச்1பி விசா பணியாளர்கள் அமெரிக்கர்களுக்குப் போட்டியா?
இவ்வகை விசாக்களின் ஆதரவாளர்கள் கூறுகையில், பொருளாதாரம் வலுவாக இருந்து பணியாளர் தேவை அதிகமாகும் பட்சத்தில், அமெரிக்காவில் இல்லாத திறமையாளர்களை விசா மூலம் நிரப்புவது அவசியமான ஒன்று. ஆனால் எச்1பி பணியாளர்களால் அமெரிக்கர்களின் ஊதியம் மற்றும் பணிபுரியும் சூழல் பாதிப்பு வரக்கூடாது என நிறுவனங்கள் உறுதியளிக்க வேண்டும்.
விசா விமர்சகர்கள் கூறுகையில், ஒரே வேலைக்கு அமெரிக்கர்களுக்குத் தரும் ஊதியத்தை விட எச்1பி பணியாளர்களுக்குக் குறைவாகவே வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக அமெரிக்க்களுக்கு மாற்றாக எச்1பி பணியாளர்கள் நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதில் யார் வாதம் சரியானது?
பொதுவாகவே குடியேற்றக் கொள்கைகள் கடினமான ஒன்றுதான். 2017ம் ஆண்டில் சுமார் 40,500 நிறுவனங்கள் எச்1பி விசா பணியாளர்களைப் பணியமர்த்தியுள்ளன.இதில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் கிடைக்காத அதிகத் திறன் சார்ந்த பணியாளர்கள். பல நேர்வுகளில், இவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் துவங்கி, பல நவீன தொழில்நுட்பங்களைக் கண்டறிவதன் மூலம் அமெரிக்காவை உச்சத்தில் வைத்துள்ளனர்.
ஆனால் இதனால் அதிகப் பலனடைவது யார் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒரு ஆய்வின் படி, அங்கீகரிக்கப்பட்ட எச்1பி விண்ணப்பங்களில் 32% வெறும் 20 நிறுவனங்களுடையது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் அவுட்சோர்சிங் மூலம் தொடக்க நிலை ஊழியர்களைச் சில்லறை வர்த்தகம், வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்குப் பணியமர்த்தும் இந்திய நிறுவனங்களே ஆகும். அதில் சில அமெரிக்க நிறுவனங்களும் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்காக அதிக விசாக்களைப் பெற்றுள்ளன.
பிரபல அமெரிக்க நிறுவனங்கள் கூட, அவுட்சோர்சிங் நிறுவனங்களைப் போல இந்த விசா திட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துகின்றன என்கிறார் எச்1பி விசாவில் படித்த கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் நார்மன் மட்லாப்.
முறைகேடுகள் நடைபெறுகின்றனவா?
முறைகேடுகள் நடப்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாலும், விமர்சகர்கள் கூறும் அளவிற்கு இல்லை. முறைகேடுகள் செய்யும் நிறுவனங்களுக்கு அரிதாகவே அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. 2015 ஆண்டு நடைபெற்ற சம்பவத்தில், தங்களுக்கு மாற்றாக நியமிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்குப் பயிற்சி அளித்தால் தான் பணிக்கொடை போன்றவற்றைத் தரமுடியும் என டிஸ்னி பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.இது தொடர்பான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டாய்ஸ் ஆர் அஸ், நியூயார்க் லைப் இன்ஸ்சுரன்ஸ் நிறுவன ஊழியர்களும் இதே போலக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாகப் பல விசாரணைகள் நடைபெறுவதாகவும் , விரைவில் இவை தடுக்கப்படும் எனவும் அமெரிக்கக் குடியேற்றத்துறை முன்னாள் இயக்குநர் கூறியுள்ளார்.
சட்டங்களைக் கடுமையாக மாற்றி விசா திட்டத்தை நிர்வகிப்பது அரசாங்கத்தின் கடமை. ஏனெனில் இது போன்ற முறைகேடுகளில் பெரும்பாலும் பணியாளர்கள் இது சட்டத்திற்கு உட்பட்டதே என வாதாடுகின்றனர்.
டிரம்பின் அரசாங்கம் செய்த மாற்றங்கள் என்ன?
டிரம்ப் தனது பிரச்சாரங்களில், வெளிநாட்டுப் பணியாளர்களுக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்கர்களை அறிமுகப்படுத்தி 'இதுபோன்று மறுமுறை ஏற்பட விடமாட்டோம்' என்றார்.
அவர் பொறுப்பேற்றவுடன் எச்1பி மற்றும் பிற விசா திட்டங்களை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டார். ஏப்ரல்2017ல், 'அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள். அமெரிக்கர்களைப் பணியமர்த்துங்கள்' என்ற செயலாணையில் கையெழுத்திட்டார்.
விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் செயல்முறையும் கடினமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்த ஆகஸ்ட் வரை 45% விண்ணப்பங்களுக்கு, விளக்கம் அல்லது கூடுதல் ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதன் மூலம் விண்ணப்பங்கள் வழங்குவது தாமதமாவதுடன், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும், மோசடி தடுப்பு குழு எச்1பி பணியாளர்கள் பணிபுரியும் இடத்திற்குத் திடீர் ஆய்வுகள் செய்து அவர்கள் என்ன வேலை செய்கின்றனர், அவர்களுக்கான தேவை இருக்கிறதா? சம்பளம் எவ்வளவு போன்றவை தீவிரமாக விசாரிக்கப்படுகின்றன.
அடுத்தகட்ட திட்டங்கள் என்ன?
எச்1பி விசா பணியாளர்களின் மனைவியை விசா முடியும் வரை அல்லது கிரீன் கார்டுக்குக் காத்திருக்கும் வரை பணியாற்ற அனுமதிக்கும் ஒபாமா காலத் திட்டமான H-4EAD யை முடிவுக்குக் கொண்டு வர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எச்1பி விசா தேர்வு முறையில் ' அதிகத் திறன் அல்லது அதிகச் சம்பளம்' என்பதன் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யக் கூட்டாட்சி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
முடிவாக, குலுக்கல் முறையை அகற்றவும் டிரம்ப் விரும்புகிறார்.
அமெரிக்கச் சட்டமன்றத்தின் பணி என்ன?
இப்போது செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் அமெரிக்கச் சட்டமன்றத்தில் புதிய சட்டமாக இயற்றப்பட வேண்டும் அல்லது குடியேற்ற அமைப்பை முற்றிலும் சீரமைக்க வேண்டும். மேலும் டிரம்ப்பின் அரசு குலுக்கல் முறையை ரத்து செய்யவும், எச்1பி விசா பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தகுதி வாய்ந்த அமெரிக்கர்கள் அதிகம் பணியமர்த்தப்படுவார்கள்.