நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ்-இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2018ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சலில் பாரிக் முதல் முறையாகத் தாக்கல் செய்யப்படும் காலாண்டு முடிவுகள் என்பதால் முதலீட்டாளர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பியது.
வருவாய்
2017 மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் 17,866 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்ற நிலையில், 2018 மார்ச் காலாண்டில் 18,617 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று இன்போசிஸ் அசத்தியுள்ளது.
லாபம்
வரிக்கு பிந்தைய லாபத்தில் இன்போசிஸ் கடந்த வருடம் 3,603 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றது. 2018மார்ச் காலாண்டில் 3,690 கோடி ரூபாய் அளவில் உயர்ந்து அசத்தியுள்ளது.
டிசம்பர் காலாண்டை ஒப்பிடும் போது இதன் அளவு 28 சதவீதம் சரிந்துள்ளது.
டாலர் வருவாய் மற்றும் லாபம்
கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டையும் நடப்பு நிதியாண்டின் மார்ச் காலாண்டையும் ஒப்பிடுகையில் இன்போசிஸ்-இன் டாலர் வருவாய் 2,569 மில்லியன் டாலரில் இருந்து 2,805 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதேபோல் லாபத்தில் இதன் அளவு 543 மில்லியன் டாலரில் இருந்து 571 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
வருடாந்திர முடிவுகள்
இந்நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 68,484 கோடி ரூபாயில் இருந்து 70,522 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதேபோல் லாபம் 14,353 கோடி ரூபாயில் இருந்து 16,029 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வளர்ச்சி
இந்நிறுவனத்தின் நிலையான நாணய வருவாய் வளர்ச்சி அளவுகள் 2019ஆம் நிதியாண்டில் 6-8 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது, இதை டாலர் அளவீட்டில் 7-9 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஈவுத்தொகை
மேலும் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 20.50 ரூபாயும், 10.00 ரூபாய் சிறப்பு ஈவுத்தொகையாகவும் அளிக்க முடிவு செய்துள்ளது.
சம்பள உயர்வு
இந்நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய ஊழியர்களுக்கு அதிகப்படியாக ஓற்றை இலக்க ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாகப் பிரவின் ராவ் தெரிவித்தார்.
இதுவே ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.
ஊழியர் வருவாய்
அதேபோல் ஒரு ஊழியரிடம் இருந்து கிடைக்கும் வருமானத்தின் அளவு தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் 52,500 டாலராக உள்ளது.
ஊழியர்கள் வெளியேற்றம்
இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் இந்தக் காலாண்டில் அதிகளவில் கட்டுப்படுத்தியுள்ளதாகப் பிரவின் ராவ் தெரிவித்தார்.