சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் 2018-ம் ஆண்டுக்கான டிபன்ஸ் எக்ஸ்போ பாதுகாப்புக் கண்காட்சியின் போது வெள்ளிக்கிழமை 3-வது இந்தியா -ரஷ்யா ராணுவதொழிலியல் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்தியத் தரப்புப் பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் தலைமை தாங்கினார். ரஷ்யாவின் தொழில் வர்த்தகத் துணை அமைச்சர் திரு ஓலக் ரியாஸன்ட்செவ், ரஷ்ய தரப்புக்குத் தலைமை தாங்கினார்.
ரஷ்யக் குழுவில் அரசு உயர்நிலைப் பிரதிநிதிகளுடன் முன்னணி பாதுகாப்புத் தொழில்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 75 இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனங்களும், 28 ரஷ்ய அசல் இராணுவ கருவிகள் உற்பத்தி நிறுவனங்களும், பங்கேற்றன.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இணங்க இந்திய ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதற்கான பொருட்கள் தயாரிக்கும் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கும். ரஷ்ய நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தாகின.