கடந்த ஒரு வருடத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதித்த விஷயம் என்றால் பிரதமர் மோடி அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தடையும், மறைமுக வரியை முழுமையாக மாற்றி அமைத்த சரக்கு மற்றும் சேவை வரி தான்.
இந்நிலையில் இந்தப் பாதிப்புகளில் இருந்து இந்தியா மீண்டுவிட்டது என உலக வங்கி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலக வங்கி
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு 2018ஆம் ஆண்டில் 7.3 சதவீதமும், 2019இல் 7.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது.
வேகமான வளரும் பொருளாதாரம்
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி தென் ஆசிய சந்தையை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும், இதன் மூலம் சீனாவிடம் இழந்த வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற பெயரை இந்தியா மீண்டும் பெறும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதன் வாயிலாகத் தென் ஆசிய சந்தையின் வளர்ச்சி 2018இல் 6.9 சதவீதமும், 2019இல் 7.1 சதவீதமும் வளர்ச்சி அடையும் என ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
5 காலாண்டுகள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 5 காலாண்டுகளாகப் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியின் காரணமாக அதிகளவிலான பாதிப்பை சந்தித்தது, தற்போது இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வளர்ச்சி பாதைக்கு இந்தியா செல்ல துவங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு
இக்காலகட்டத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. ஆகையால் நாட்டின் வளர்ச்சி தொய்ந்தது மட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க இந்திய சந்தையால் முடியவில்லை.
81 லட்ச வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் சரியான நிலையில் வைக்க வேண்டும் என்றால் ஒரு வருடத்திற்குச் சுமார் 8.1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
மாறுபட்ட கருத்து..
உலக வங்கி பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம், வர்த்தகச் சந்தை மீண்டது எனக் கூறினாலும் ஜிஎஸ்டிக்குப் பின் வர்த்தகர்களின் நிலையில் பற்றிய கருத்துகள் மாறுபட்டதாகவே நிலவுகிறது. இந்நிலையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் நேரடியாக மக்களிடம் இதைக் கேள்வியாகக் கொண்டு சென்று வாக்கெடுப்பு நடத்தியது.
வாக்கெடுப்பு
இந்த வாக்கெடுப்பில் சுமார் 1,600க்கும் அதிகமான வாசகர்கள் வாக்கு அளித்துள்ளனர், இதில் கிடைத்த தகவல்கள் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்ததில் இந்தியாவில் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கியுள்ளது.
சூப்பரா இருக்கு..
மத்திய அரசு ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த பின்பு எனது வர்த்தகம் சூப்பரா இருக்கு என மொத்த வாக்கெடுப்பில் 9 சதவீதம் பேர் (151 பேர்) வாக்களித்துள்ளனர்.
அதேபோல் ஜிஎஸ்டிக்குப் பின் ஏனோதானோன்னு போகுது என்று 16 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
ரொம்ப மோசம்
அதேபோல் ஜிஎஸ்டி வந்த பின்பு 43 சதவீதம் பேர் தங்களது வர்த்தகம் ரொம்ப மோசமான நிலையை அடைந்துள்ளது எனச் சுமார் 694 பேர் வாக்களித்து உள்ளனர்.
மூடிவிட்டோம்
கடைசியாகச் சுமார் 31 சதவீதம் பேர் ஜிஎஸ்டியால் பிசினஸை மூடிவிட்டோம் எனத் தெரிவித்து அதிர்ச்சியை அளித்துள்ளனர்.