இந்திய நகரங்களில் அதிகச் சம்பளம் அளிக்கும் நிறுவனங்கள் பெங்களூருவில் தான் உள்ளது என்றும் சராசரியாக ஆண்டுக்கு 10.8 லட்சம் ரூபாய் வரை இங்கு உள்ள ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்றும் ரன்ஸ்டாட் இன்சைட்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை இந்திய நகரங்களில் 6 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த 20 துறைகள் சார்ந்த 1,00,000 ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு
ரன்ஸ்டாட் இன்சைட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பெங்களூரு 10.3 லட்சம் ரூபாய் என முதல் இடத்தினையும், புனே இரண்டாம் இடத்தினையும் பிடித்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சராசரியாக 9.9 லட்சம் ரூபாயும், நிதி நகரமான மும்பையில் உள்ளவர்கள் சராசரியாக 9.2 லட்சம் ரூபாயினையும் ஆண்டுச் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
சென்னை
வந்தாரை வாழ வைக்கும் சென்னை 8 லட்சம் ரூபாயுடன் 5-ம் இடத்தினைப் பிடித்துள்ளது. அதே நேரம் ஹைதராபாத் 7.9 லட்சம் ரூபாயுடன் 6-ம் இடத்தினையும், கொல்கத்தா 7.2 லட்சம் ரூபாயுடன் 7-ம் இடத்தினையும் பிடித்துள்ளது.
துறைகள்
துறை வாரியாக அதிகச் சம்பளம் என்று பார்த்தால் பார்மா மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 9.6 லட்சம் வரை சராசரி சம்பளத்தினை அளித்துள்ளன.
எப்எம்சிஜி
பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறையினைத் தொடர்ந்து வேகமாக நுகரக் கூடிய எப்எம்சிஜி துறையில் 9.2 லட்சம் ரூபாய் சராசரி சம்பளமாக அளிக்கப்படுகிறது.
ஐடி துறை
இந்திய நிறுவனங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்வதில் முதல் இடத்தில் உள்ள ஐடி துறையில் சராசரியாக ஆண்டுக்கு 9.1 லட்சம் சம்பளமாகப் பெறுகின்றனர்.
கட்டுமானம் & ரியல் எஸ்டேட்
உள்கட்டமைப்பு, கட்டுமானம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் 9.1 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு என்பது சராசரியாக உள்ளது.
மருத்துவர்கள்
சிறப்பு மருத்துவர்கள் ஆண்டுக்கு 18.4 லட்சம் ரூபாய் சராசரி சம்பளத்தினைப் பெறுகிறார்கள். பிளாக் செயின் தொழில்நுட்ப வல்லுநர்கள் 14.6 லட்சம் ரூபாய் சராசரி சம்பளத்தினைப் பெறுகிறார்கள்.