இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவிற்கு அடுத்ததாகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போவது ஐடியா செல்லுலார். ஆனால் இந்த மாற்றத்திற்கு அதிகளவிலான பணம் தேவைப்படுகிறது.
ஆம், ஐடியா ஏற்கனவே வோடபோன் இந்தியாவுடன் இணையத் திட்டமிட்டுள்ள இந்நிலையில் நிலுவை தொகையைக் கொடுத்தால் தான் இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்க முடியும் என டெலிகாம் துறை உறுதியாகத் தெரிவித்துவிட்டது.
நிலுவை தொகை
லைசென்ஸ் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம், ஒரு முறை ஸ்பெக்ட்ரம் கட்டணம் எனப் பல வழிகளில் சுமார் 18,870 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஐடியா செல்லூலார் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் டெலிகாம் துறைக்குச் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது.
இதைச் செலுத்தினால் தான் இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்க முடியும் எனவும் கூறியுள்ளது.
ஐடியா செல்லுலார்
இந்நிலையில் நிதி தேவைக்காகவும் இணைப்பிற்குப் பின் கூட்டணி நிறுவனத்தில் ஐடியா செல்லுலார் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் ஆதித்யா பிர்லா குரூப், தனது கிளை நிறுவனங்களை ஐடியா செல்லுலார் பங்குகளை விற்பனை செய்து 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைத் திரட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
7 நிறுவனங்கள்
ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் சுமார் 7 நிறுவனங்கள் உள்ளது, இதில் குமார் மங்களம் பிர்லா தலைமை வகிக்கும் ஆதித்யா பிர்லா குழுமமும் ஒன்று, ஐடியா செல்லூலார் நிறுவனத்தில் சுமார் 42.57 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
முக்கிய நிறுவனங்கள்
ஐடியா நிறுவனத்தில் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 23.14 சதவீத பங்குகளையும், பிர்லா டிஎம்டி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் 6.51 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
பங்கு விற்பனை
ஆதித்யா பிர்லா குரூப்-இன் உத்தரவை ஏற்று NVB plc ஐடியா நிறுவனத்தின் 3.92 கோடி பங்குகளை 71.5 ரூபாய் விலையில் சுமார் 280.57 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதனைப் பல்க் டீல் வாயிலாக இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
முதலீடு
ஏற்கனவே திட்டமிட்டபடி ஆதித்யா பிர்லா, ஐடியா நிறுவனத்தின் வர்த்தகத்தை வலிமைப்படுத்த 3,250 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
மாற்றம்
தற்போது இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் வாடிக்கையாளர் மற்றும் வருமான அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ஐடியா மற்றும் வோடபோன் இணைப்பிற்குப் பின் மொத்த சந்தையில் 45 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இந்தக் கூட்டணி நிறுவனம் பெற உள்ளது.
இணைப்பிற்குப் பின் ஜியோ போலவே மலிவான சேவையை அறிவிக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.